கோட்டா கொள்ளையிட்ட எதனையும் ஒப்புவித்தால் மறுதினமே பதவி விலகுவேன்! மகிந்தானந்த சவால்

கோட்டாபய ராஜபக்ச கொள்ளையிட்டார் என்பதை ஒப்புவிக்கும் ஒரு அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தால், மறுதினமே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகி விடுவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் அவர் இதனை கூறியுள்ளார். சிறப்பு நீதிமன்றத்தை ஏற்படுத்தி, தினமும் வழக்கு விசாரணைகளை நடத்தி ராஜபக்சவினரை சிறையில் அடைக்க கடந்த அரசாங்கம் முயற்சித்தது.

எனினும் அவர்களால் கடந்த 5 ஆண்டுகளாக ஒரு திருடனை கூட பிடிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச சம்பந்தப்பட்ட கோப்புகள் மூடப்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வருண லியனகே சுமத்திய குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச கொள்ளையிட்ட ஒரு பிடி மண், கடுகளவு எதனையும் கண்டுபிடிக்க முடிந்திருந்தால், அவர் தற்போது ஜனாதிபதி மாளிகைக்கு பதிலாக சிறையில் இருந்திருப்பார்.

கோட்டாபய ராஜபக்ச சிறையில் அடைப்பதற்காக சிறப்பு நீதிமன்றத்தை ஏற்படுத்தி, தினமும் வழக்கு விசாரணைகள் நடத்தப்பட்டன.

மிக் விமானம் உட்பட அனைத்தையும் தேடினர். தேடப்பட்ட அனைத்துக்கும் எதிராக வழக்கு தொடர்ந்தனர்.

எனினும் ஐந்து ஆண்டுகளாக கோட்டாபய ராஜபக்ச கொள்ளையிட்டார் என்பதை கண்டுபிடிக்க முடியாது போனது எனவும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *