
வாஷிங்டன், ஏப் 24
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மத்தியநிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட பின், நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது,
இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு உறவு முன்னேறியுள்ளது. அதை யாரும் கேள்வி கேட்கவில்லை. இருநாட்டு உறவுகள் ஆழமடைந்துள்ளன. அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவு நாளுக்கு நாள் மேம்பட்டு வருகிறது. இந்தியா நிச்சயமாக அமெரிக்காவுடன் நட்புறவை விரும்புகிறது.
அதே சமயம் ரஷியாவுடனான உறவு என்பது பாதுகாப்பு உபகரணங்களுக்கான பாரம்பரிய சார்பு மட்டுமல்ல, ரஷியாவுடன் எங்களுக்கு ஒரு நேர்மறையான புரிதல் உள்ளது. இதனால் ரஷியாவுடன் இந்தியா ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய சூழல் உள்ளது.
உக்ரேனியப் போருக்குப் பிறகான சூழல் பெரும் சவாலை உருவாக்கியுள்ளது. சூரியகாந்தி எண்ணெய் பெரும்பாலும் அந்நாட்டில் இருந்து தான் வருகிறது. இப்போது அது பாதிப்படைந்துள்ளது. விவசாய உறங்கள் ரஷியாவிடமிருந்து வருவதும் தடை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.