
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாகக் கட்டட பொருள்களின் விலை வாரத்துக்கு வாரம் அதிகரித்து செல்கின்றமையினால் கட்டட நிர்மாண ஒப்பந்தக்காரர்கள் மற்றும் தனி நபர் கட்டட நிர்மாண தொழிலாளர்கள் பாரிய நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளதாகத் திருகோணமலை மாவட்ட கட்டட ஒப்பந்தக்காரர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
திருகோணமலையில் அமைந்துள்ள மாவட்ட கட்டட ஒப்பந்தக்காரர்களின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே திருகோணமலை மாவட்ட கட்டட ஒப்பந்தக்காரர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் குகதாஷ் பிரகாஷ் இதனை கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்தும் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டில் கட்டட பொருட்களின் விலை வீழ்ச்சி வீதத்தினை பார்க்கும் போது 2020 இல் இருந்து 2022 ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் பிரதான கட்டிடப் பொருட்களின் விலை அதிகரிப்பு இவ்வாறு உச்சத்தைத் தொட்டுள்ளது.
அந்த வகையில் சீமெந்தின் விலை ரூபா 858 இருந்து ரூபா 2175 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி விலை அதிகரிப்பின் வீதம் (155.9வீதம்), கம்பி டொன் ஒன்றின் விலை ரூபா 165,000 இருந்து ரூபா 595,000 ஆக அதிகரித்துள்ளது.
அதன்படி விலை அதிகரிப்பின் வீதம் (260.6வீதம்) மற்றும் தடிப்பு அமானோ சீட் Zn ஒன்றின் விலை ரூபா 522 இருந்து ரூபா 4500 ஆக அதிகரித்துள்ளது.
அதன்படி அதிகரிக்கப்பட்ட விலை அதிகரிப்பின் வீதம் (195 வீதம்) மற்றும் எரிபொருள் விலை ஏற்றம் காரணமாக அனைத்து நிர்மாண பொருட்களும் பல மடங்கு விலை ஏற்றம் அடைந்துள்ள நிலையில் வாகன சாரதிகளின் சம்பள உயர்வு வேலையாட்களின் சம்பள உயர்வு என பாரிய நெருக்கடியினை சந்திக்கவேண்டியுள்ளது.
மேலும் இவ்வாறான விலை அதிகரிப்பு காரணமாக இன்று நிர்மாண வேலைகளை நிறைவு செய்து கொள்ள முடியாமல் கட்டட ஒப்பந்தக்காரர்கள் பாரிய நஷ்டத்தை அடையும் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
அரசு இந்த விலை அதிகரிப்பினை கருத்தில் கொண்டு ஒப்பந்தக்காரர்களின் விலை மதிப்பினை விலை அதிகரிக்கப்பட்டதன் விகிதாசாரம் அடிப்படையில் சுமார் 200 வீதத்தினால் விலை மதிப்பினை அதிகரித்தால் மாத்திரமே அவர்கள் பொருந்திக் கொண்ட அனைத்து வேலைகளையும் பூர்த்தி செய்து தமக்கு ஏற்படும் நஷ்டத்திலிருந்து ஓரளவேனும் தம்மைக் காப்பாற்றி அவ்வேலைகளை நிறைவு செய்ய முடியும்.
இவ்வாறு விலை அதிகரிப்பு மற்றும் விலை மதிப்பின் மூலம் ஏற்படும் நட்டம் சம்பந்தமாக அரசும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களும் உரிய கவனம் செலுத்தி அதற்கான நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ள வேண்டும்” இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.