வடமாகாணத்திற்கு மின்தகன சாலைகளை அமைக்குமாறு கோரிக்கை – ஆ. கேதீஸ்வரன்

வட மாகாணத்தில் ஏற்பட்ட நெருக்கடியான சூழ்நிலையில் எமக்கு கைகொடுத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார் வடமாகாண மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன்.

வடமாகாணத்தில் கடந்த ஓகஸ்ட் மாதத்தின் நடுப்பகுதி முதல் கொவிட் தொற்றாளர்களின்
எண்ணிக்கையும், இறப்புக்களின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரித்துள்ளது.

வடமாகாணத்தில் இதுவரை 34,764 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள். இவர்களில் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் 14,586 தொற்றாளர்களும், செப்ரெம்பர் முதல் 20 நாட்களிலும் 7,685 தொற்றாளர்களும்
அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேபோல, வடமாகாணத்தில் இதுவரை கொவிட் தொற்றால் 685 இறப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில் ஓகஸ்ட் மாதம் மட்டும் 228 இறப்புக்களும் செப்ரெம்பர் மாதம் முதல் 20 நாட்களில் 276 இறப்புக்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சின் விதிமுறைகளுக்கமைய கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்ட உடலங்கள் தகனம் செய்யப்பட வேண்டுமாயின் மின் தகன சாலையிலேயே தகனம் செய்ய முடியும்.

வடமாகாணத்தை பொறுத்தவரை யாழ்.மாநகர சபையிலும், வவுனியா நகர சபையிலும் என இரண்டு மின்தகன சாலைகள் மட்டுமே காணப்படுகின்றன. இவற்றில் ஒரு நாளைக்கு ஆகக்கூடியது 11 உடலங்களை மட்டுமே தகனம் செய்ய முடியும்.

ஆனால் ஓகஸ்ட் மாத நடுப்பகுதியின் பின்னர் இறப்புக்களில் ஏற்பட்ட சடுதியான அதிகரிப்பால் மின் தகனத்திற்காக உடலங்கள் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

செப்ரெம்பர் மாதம் 3 ஆம் திகதி நிலைவரப்படி 54 உடலங்கள் மின் தகனத்திற்காக வடமாகாணத்தில் தேங்கியிருந்தன.

இந்த உடலங்களை உரிய சுகாதார பாதுகாப்பு நடைமுறையில் பேணுவதற்குரிய குளிரூட்டி வசதிகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருந்ததால் 54 உடலங்களையும் உரிய முறையில் பேணுவதில் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கினோம்.

எனவே, மாகாணத்திற்கு வெளியே உள்ள மின் தகன சாலைகளுக்கு உடலங்களை அனுப்பவேண்டிய
சூழ்நிலைக்கு தள்ளப்பட்டோம்.

எமது வேண்டுகோளுக்கு அமைவாக, ஜனாதிபதி அவர்கள் வழங்கிய அறிவுறுத்தலுக்கு அமைய, வடமாகாண ஆளுநர், பிரதம செயலாளர் மற்றும் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஆகியோரின் முயற்சிகளால், வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்த உடலங்களை மின்தகனம் செய்வதற்குரிய அனுமதி கிடைக்கப்பெற்றது.

அதனடிப்படையில், செப்ரெம்பர் மாதம் 5 ஆம் திகதி முதல் இன்று வரை 95 உடலங்கள் மேற்படி மாகாணங்களில்
மின் தகனத்திற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இதில் 79 உடலங்கள் வடமத்திய மாகாணத்திற்கும், 16 உடலங்கள் கிழக்கு மாகாணத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் இருந்து 45 உடலங்களும், கிளிநொச்சியில் இருந்து 28 உடலங்களும், முல்லைத்தீவில் இருந்து 14 உடலங்களும், வவுனியாவில் இருந்து 8 உடலங்களும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

மேற்படி, உடலங்களை வேறு மாகாணங்களுக்கு அனுப்புவதற்கான வாகன மற்றும் பயண செலவையும், பிரேத
பெட்டிகளுக்கான செலவினங்களையும் சில நன்கொடையாளர்களும், பொது அமைப்புக்களும்
பொறுப்பெடுத்திருந்தனர்.

இந்நிலையில், கடந்த ஒருவார காலமாக வடமாகாணத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கையிலும் இறப்புக்களின் எண்ணிக்கையிலும் வீழ்ச்சி ஏற்படுவதை அவதானிகக் கூடியதாக உள்ளது.

எனவே, கடந்த வாரத்தில் வெளி மாகாணங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் உடலங்களின் எண்ணிக்கையும்
குறைவடைந்துள்ளது.

வட மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நெருக்கடியான சூழ்நிலையில் எமக்கு கைகொடுத்த வடமத்திய மற்றும் கிழக்கு மாகாண அதிகாரிகளுக்கும், மக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இந்த இறுக்கமான சூழ்நிலையில் கொவிட் தொற்றுக்குள்ளான உடலங்களை வெளி மாகாணங்களுக்குக் கொண்டு செல்வதற்குரிய ஏற்பாடுகளை செய்வதற்கு உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் மற்றும் மின் தகனம் செய்வதற்குரிய வாகன ஒழுங்குகளை மேற்கொண்டும், மேலும் பல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பல மாவட்டங்களில் 3 முதல் 4 வரையான மின்தகன சாலைகள் காணப்படுகின்றன. ஆனால், வடமாகாணம் முழுவதற்கும் இரு மின்தகன சாலைகள் மட்டுமே இருக்கின்றன.

தற்போது வடமாகாணத்தில் உள்ள சில உள்ளுராட்சி மன்றங்கள் மின்தகன சாலைகளை அமைப்பதற்குரிய முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன.

எனவே, காலத்தின் தேவையை உணர்ந்து இயன்றளவு விரைவில் வடமாகாணத்திற்கு தேவையான மின்தகன சாலைகளை அமைக்க சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஒன்றிணைவோம் எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *