
பொருளாதார நெருக்கடியின் போது, வேறுபாடுகளைக் கடந்து நடக்கும் ஆர்ப்பாட்டங்களின் போது தான் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை முழுமையாகப் புரிந்து கொள்ள முடிகிறது என ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ள முச்சக்கரவண்டியின் சாரதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி சாமானிய மக்களை கூடுதலாகப் பாதித்திருக்கிறது என்பதற்கு அவர் ஓர் எடுத்துக்காட்டு.
காலி முகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக நடக்கும் ஆர்ப்பாட்டம் இரண்டு வாரங்களுக்கும் மேலாக நீடித்திருக்கிறது.
வார இறுதி நாட்களில் மற்ற நாட்களை விட கூட்டம் அதிகமாக இருக்கிறது.
குறித்த முச்சக்கர வண்டி சாரதியும் அவ்வப்போது அங்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் நபர்களில் ஒருவர்.
இதன்போது அவர் தெரிவிக்கையில்,
“மலையகத்தில் இருந்து வந்து சுமார் 12 ஆண்டுகளாக கொழும்பு நகரில் முச்சக்கரவண்டி ஓட்டுகிறேன். சந்தோஷமாக போய்க்கொண்டிருந்தது. பெட்ரோல் விலை, அத்தியவசியப் பொருள்களின் விலை ஆகியவை வாழ்க்கையை மோசமாகப் பாதித்திருக்கிறது” என இதன்போது குறிப்பிட்டுள்ளார்.