ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு கோப்குழு விடுத்துள்ள பரிந்துரை!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தினால் 2022 – 2025 காலப் பகுதியில் 21 விமானங்களை குத்தகைக்குப் பெற்றுக் கொள்வது தொடர்பான கொள்முதல் செயற்பாட்டை மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு 21 விமானங்களை குத்தகைக்கு எடுப்பது தொடர்பில் ஏற்பட்ட கருத்தாடலைத் தொடர்ந்து இதுபற்றி ஆராய்வற்கு இந்நிறுவனம் இன்று கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டது.

அதன்போது, குறித்த பரிந்துரை முன்வைக்கப்பட்டது. தற்பொழுது காணப்படும் பொருளாதார நிலைமையின் கீழ் முழுமையான செயற்பாட்டை மறுபரிசீலனை செய்யுமாறும், உரிய கொள்முதல் செயல்முறை உரிய நடைமுறைகளுக்கு இணங்குகிறதா என்பது பற்றி ஆராயுமாறும் அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சின் செயலாளர்களுக்கு கோப் குழுவின் தலைவர் கலாநிதி சரித ஹேரத் ஆலோசனை வழங்யுள்ளார்.

கொள்முதல் வழிகாட்டலை உரிய முறையில் தயாரித்தல் மற்றும் சம்பந்தப்பட்ட கொள்முதல் செயன்முறைக்கு அமைச்சரவை அனுமதி பெறுமாறும் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

விமானங்களின் சேவைக்காலம் முடிவடைந்ததும் அவற்றுக்காக விமானங்களை மாற்றீடு செய்தல் விமான சேவையை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு அவசியமான நடைமுறை என்பதை ஏற்றுக்கொள்ள முடியும். எனினும், நாட்டின் நெருக்கடி நிலைமை காணப்படுவதால் இது குறித்து அதிக கவனம் செலுத்தி உரிய தேவைகளைப் பூர்த்தி செய்வது அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, ஸ்ரீலங்கன் விமான சேவையில் தற்பொழுது காணப்படும் விமானங்களில் எண்ணிக்கை சில காலங்களில் 24 ஆக குறைவடையும். எனவே, விமானங்களை உடனடியாகப் பெற்றுக்கொள்ள முடியாது. இதற்கு சிறிது காலம் எடுக்கும் என்பதால் அதற்கான செயற்பாடுகளை ஆரம்பித்து விளம்பரத்தைப் பிரசுரித்திருந்ததாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் அசோக பத்திரகே மற்றும் அதன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கமைய சந்தை நிலவரங்களை கருத்தில் கொண்டு, இந்த செயல்முறை 6 – 12 மாதங்களுக்கு இடையில் எடுக்கும், மேலும் இந்த நடவடிக்கைகள் அமைச்சின் ஊடாக மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்படும் என்று பத்திரகே தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *