
இலங்கைத் தீவின் உள்ளக பொருளாதாரத்தையும் வாழ்வாதாரத்தையும் தீர்மானிக்கும் விவசாயமும் மீன்பிடியும் மண்ணெண்ணை இல்லாமை காரணமாக பாரிய வீழ்ச்சியை அடைந்துள்ளது என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் உற்பத்திகளின் அளவு வீழ்ச்சியடைவதனால் விலை அதிகரிப்பும் மக்களின் வாழ்க்கைத்தர போராட்டமும் முட்டி மோதுகின்ற அவல நிலை உருவாகியுள்ளது.
ஏற்கனவே விவசாயத்திற்கு தேவையான இரசாயன உரத்தினை தடை செய்தமை காரணமாக கடந்த ஆண்டு பெரும்போக நெல் வேளாண்மை மிகப் பாரிய வீழ்ச்சியை அடைந்தது. இதனால் அரிசியின் விலை அதிகரித்ததுடன் பாரிய இறக்குமதிக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது.
கடற்றொழிலாளர்களும் எரிபொருள் இல்லாமையால் பல தொழிலாளிகள் தொழில் முடங்கிய நிலையில் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். மண்ணெண்ணையின் விலை காரணமாக பலர் போதிய உற்பத்தி இல்லாது வருமானத்தை இழந்து வருகின்றனர்.
நாட்டு மக்களின் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்யும் பிரதான தொழில்கள் எரிபொருள் இன்மையால் பாரிய வீழ்ச்சியை சந்திக்கும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. – எனக் குறிப்பிட்டுள்ளார்.