
2009 ஆம் ஆண்டு நாட்டில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரில் நிகழ்ந்த இனப்படுகொலைக்கு தீர்வை சர்வதேசம் பெற்றுத்தர வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவரிடம், கோரிக்கை முன்வைவக்கப்பட்டுள்ளதாக வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஜேசங் சிவில் அமைப்பின் பிரதிநிதிகளை நேற்று சந்தித்து கலந்துரையடினார். அதில் பல விடயங்களை நாம் எடுத்து கூறியிருந்தோம்.
வடக்கு கிழக்கிலே சர்வதேசத்தின் மத்தியஸ்துடன் ஒரு வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். வடக்கு கிழக்கு தமிழ் மக்கள், புலம்பெயர் தேசத்தில் வாழும் தமிழ் மக்களிடையே இந்த வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும். 1958 ஆம் ஆண்டு முதல் இனப்படுகொலை இங்கே நடைபெறுகிறது என்றால், எமக்கான அரசியல் தீர்வு ஒன்று இல்லாமையே காரணம்.
ஆகவே இவை மீண்டும் நிகழாமல் இருப்பதற்கு அரசியல் தீர்வு வேண்டும். 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இனப் படுகொலைக்கு காரணமானவர்களை, சர்வதேச நீதி மன்றில் முன்னிலைப்படுத்தி தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும். எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வில் இந்த விடயங்கள் பாரப்படுத்தப்பட வேண்டும்.
இங்கு மத சுதந்திரம் என்பதற்கு இடமே இல்லை. எப்படியாவது புத்தபெருமானின் சிலைகளை நிறுவ வேண்டும் என்று தான் அரசு விரும்புகிறது ஆகிய விடயங்களை அமெரிக்க தூதுவருக்கு தெளிவு படுத்தியுள்ளோம்.- என்றார்.