
அனைத்துக் கட்சிகளும் இணைந்து புதிய இடைக்கால அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியும், சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே அவநம்பிக்கை பிரேரணையை ஆதரிப்பதற்கு 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வந்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் புதிய இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பான இணக்கப்பாடு ஒன்று காணப்பட்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக இரண்டு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
இதன்போது சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, புதிய இடைக்கால அரசாங்கத்தை உருவாக்க இணங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை பதவி விலகச் செய்தல் மற்றும் 21ஆம் திருத்தச் சட்டத்தை முன்வைத்து 19ஆம் திருத்தச் சட்டத்தை மீள அமுலாக்கல் ஆகிய விடயங்களிலும் இருதரப்பும் இணங்கியுள்ளன.
இதேவேளை, அரசாங்கத்துக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையை ஆதரிப்பதற்கு அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் அவநம்பிக்கை பிரேரணையை ஆதரிப்பதாக இன்று பகல் அறிவித்திருந்தது.
இதற்கிடையில் இடைக்கால அரசாங்கம் ஒன்றை உருவாக்க தயாராக இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பௌத்த மஹா நாயக்கர்களிடம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்றைய தினம் முக்கியமான அமைச்சரவைக் கூட்டம் ஒன்று நடைபெறுகிறது.
இதன்போது பிரதமரால் 21ம் திருத்தச் சட்ட யோசனை முன்வைக்கப்படும் என்று முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ பதவி விலகுவதற்கு சம்மதித்துள்ளதாகவும் அது தொடர்பாக பௌத்த மஹா நாயக்கர்களுக்கு அறிவித்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன.
உதயகம்மன்பில நாடாளுமன்ற உறுப்பினரை மேற்கோள்காட்டி வெளியாக்கப்பட்டிருந்த இந்த செய்தியை பிரதமர் அலுவலகம் நிராகரித்துள்ளது.
இதுதொடர்பான ட்விட்டர் பதிவொன்றை இட்டுள்ள பிரதமரின் இணைப்புச் செயலாளர் கீத்நாத், உதய கம்மன்பிலவிற்கு உண்மை தெரியாது என்று பிரதமர் கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.