
யாழ்ப்பாணம், ஏப் 25
தமிழ் மக்களுக்கான ஒரு நியாயமான தீர்விற்கு தொடர்ந்தும் முயற்சிகள் எடுத்து, முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அமெரிக்க தூதுவரிடம், தமிழ்க் கட்சித் தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் அவர்களுக்கும், தமிழ்க் கட்சித் தலைவர்களுக்கும் இடையில் திங்கட்கிழமை யாழில் உள்ள தனியார் விடுதியொன்றில் சந்திப்பு இடம்பெற்றது.
அதில் கலந்துகொண்டு ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன்,
அமெரிக்கத் தூதுவருடனான கலந்துரையாடல் சுமார் 2 மணித்தியாலங்கள் நடைபெற்றது.
தமிழ் மக்கள் இன்று முகம்கொடுக்கின்ற விடயங்களையும், நாடு இன்று இருக்கின்ற நிலைமை தொடர்பாகவும் அவர் எங்களிடம் கேட்டறிந்து கொண்டார்.
தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்மானத்தை கொண்டு வருவதற்காக ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமை கழகத்தில் அவர்கள் கடந்த காலங்களில் பல முயற்சிகளை எடுத்திருந்திருந்தார்.
தற்போது அவர்கள் மீண்டும் வந்திருக்கின்றார்கள். தமிழ் மக்களுக்காக ஒரு நியாயமான தீர்விற்கு தொடர்ந்தும் முயற்சிகள் எடுத்து, முழுமையான ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும் என அவரை நாங்கள் கேட்டுக்கொண்டுள்ளோம்.
தங்களால் இயன்றளவு தமிழ் மக்களின் தீர்வுக்கு முயற்சிகளை எடுப்பதாக கூறியிருக்கின்றார்.
மேலும், இச் சந்திப்பு ஆக்கபூர்வமானதாகவும் பயனுள்ளதாகவும் அமைந்திருந்தது என தெரிவித்தார்.