
பீஜிங், ஏப் 26
சீனாவின் ஷாங்காய் நகரை தொடர்ந்து தலைநகர் பீஜிங்கிலும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. அங்குள்ள மக்கள் தொகை மிகுந்த மாவட்டமான சாவோயாங்கில் நேற்று முன்தினம் 26 பேருக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது.
இது சமீபத்திய பரவலில் மிகவும் அதிகமாகும். இதைத்தொடர்ந்து அங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. குறிப்பாக மிகப்பெரிய அளவில் பரிசோதனை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு இருக்கின்றன. மாவட்டத்தை சேர்ந்த 35 லட்சம் பேரும் 3 கட்ட பரிசோதனைக்கு செல்லுமாறு நகர நோய் தடுப்புக்குழு நோட்டீஸ் வெளியிட்டு இருக்கிறது.
பீஜிங் நகரில் வருகிற நாட்களில் தொற்று மேலும் அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் ஷாங்காயைப்போல பீஜிங்கிலும் ஊரடங்கு போடப்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி இருப்பு வைக்க தொடங்கி உள்ளனர். இதனால் நகரின் சூப்பர் மார்க்கெட்டுகள், கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.