21வது அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்-எதிர்க்கட்சி கோரிக்கை!

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரன்சித் மத்தும பண்டார வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

இன்று நாடு முகம் கொடுக்கின்ற சவால்களை வெற்றி கொள்வதில் சட்டமன்றத்தின் பொறுப்புகளானது தட்டிக் கழித்துவிட்டு முன்னேற முடியுமான பொறுப்புகள் அல்ல என ஐக்கிய மக்கள் சக்தியானது மென்மேலும் நினைவூட்டுகிறது.அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் போது மக்கள் அபிப்பிராயத்தை தட்டிக் கழித்துவிட்டு செயற்படுவது யதார்த்தமானதல்ல என்பதை அனைவரும் நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும்.

மதிப்புக்குரிய மகாநாயக்க தேரர்கள்,பேராயர் காதினல் மல்கம் ரஞ்சித் அவர்கள் மற்றும் சர்வமத தலைவர்களின் வேண்டுகோளானது அனைத்து அரசியல் கட்சிகளையும் இணைத்து பிரச்சினைகளுக்கான முடிவுகளை காணலாம் என்பதாகும்.இந்த ஆலோசனைக்கு ஐக்கிய மக்கள் சக்தியானது எந்தவிதமான தயக்கமும் இன்றி பூரண ஒத்துழைப்பை வழங்கும்.

இங்கு நாட்டு மக்களின் வேண்டுகோளுக்கு அமைய அரசியல் மாற்றம் இடம்பெறுவது அத்தியாவசியமானது என்பதை நாம் நினைவுபடுத்திக் கொள்கிறோம். முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கை இல்லாப் பிரேரணை தொடர்பான செயற்பாடுகள் அவ்வாறே முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள 21 ஆவது அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.நடைமுறையிலுள்ள யாப்பின் ஊடாக வழங்க முடியுமான ஆக்கபூர்வமான முடிவாக பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளினதும் ஒன்றினைந்த சர்வகட்சி அரசொன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இந்த சர்வ கட்சி ஆட்சியில் தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளடங்கக் கூடாது என்பதோடு,அனைத்து கட்சிகளும் உள்ளடங்கலான ஒரு கட்டமைப்பு சார் அமைப்பின் மூலம் குறிப்பிட்ட கால எல்லைக்கான திட்டத்தை வகுத்துச் செயல்பட வேண்டும்.இக்காலகட்டத்தில் மக்கள் இன்று முகம் கொடுக்கின்ற பிரச்சினைகளுக்கான தீர்வுகள் வழங்கப்பட்டு யாப்பு சீர்திருத்தத்தம் மேற்கொள்ளப்பட்டு பாராளுமன்ற தேர்தலுக்கு நகர வேண்டும். இந்த சர்வகட்சி அரசுக்கு அவசியமான பெரும்பான்மையை குறுகிய இலக்குகளை அடிப்படையாகக் கொண்டல்லாமல் மற்றும் தடைகள் ஏதும் அற்ற நிலையில் வழங்குவதற்கு அனைத்து கட்சிகளும் தெளிவான உறுதிமொழியை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *