
தற்போதுள்ள கடனைத் தீர்க்க சீனா மற்றுமொரு கடனை வழங்கவுள்ளதாக இலங்கையின் அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கடனை மறுசீரமைப்பதற்கு சீனா விரும்பம் தெரிவிக்கவில்லை என்றும், ஆனால் தற்போதுள்ள கடன்களை தீர்ப்பதற்கு மற்றுமொரு கடனை வழங்கத் தயாராக இருப்பதாகவும், அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நாலக கொடஹேவா செவ்வாய்க்கிழமை இன்று (26) தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடி நிலையைக் கருத்தில் கொண்டு, அந்த நெருக்கடியைச் சமாளிக்க நாட்டிற்கு சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகத் தெரிவித்தார்.
ஒரு நாட்டிற்கான கடன் மறுசீரமைப்பை அனுமதிப்பது, பல நாடுகளுக்கு கடன்களை வழங்குவதால், அது மற்ற நாடுகளை பாதிக்கும் என்பதே சீனாவின் நிலைப்பாடு.
எனவே, தற்போதுள்ள கடனை அடைக்க மற்றொரு கடனுக்கு முன்மொழியப்பட்டுள்ளது.
இது ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது, இது தொடர்பில் நிதியமைச்சர் உரிய நேரத்தில் நாடாளுமன்றத்தில் விவாதிப்பார்-என்றார்