பிரான்ஸ்சிற்கு விஜயம் மேற்கொண்ட யாழ்.மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையிலான அணியினர் பல்வேறு அமைப்பினரையும் சந்தித்து கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பிரான்ஸ் நாட்டிலுள்ள பொபிக்னி (Bobigny) நகரசபையின் முதல்வருக்கும் யாழ்.மாநகர சபை முதல்வருக்குமான கலந்துரையாடல் ஒன்று25 ஆம் திகதி பொபிக்னி நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.
இச் சந்திப்பில் தமிழர்கள் தங்களுடைய நீண்ட கால அரசியல் அபிலாசைகள் மற்றும் பொபிக்னி நகர சபையுடன் இணைந்து யாழ்.மாநகர சபை எவ்வாறு பணியாற்றலாம் என்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் பொபிக்னி நகர முதல்வர் அதன் பிரதி முதல்வர்,நகர சபை உறுப்பினர்கள்,யாழ்.மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன்,நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாதன் மயூரன் மற்றும் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதாரஜன் பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
