இலங்கையின் நெருக்கடி குறித்து வெளியான பாடல்!

தென்னிந்திய தமிழ் திரைப்பட நடிகரும், இயக்குனருமான T.ராஜேந்தர் இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலை குறித்த பாடலை வெளியிட்டுள்ளார்.

சாதனை தமிழா தயாரிப்பில், இலங்கையின் பாடலாசிரியர் கவிஞர் அஸ்மின் எழுதிய “நாங்க வாழணுமா, சாகணுமா சொல்லுங்க” எனும் பாடலை T.ராஜேந்தர் பாடியுள்ளதுடன், சமீல் இசையமைத்துள்ளார்.

இது குறித்து நடைபெற்ற பத்திரிகை சந்திப்பில் இயக்குநர் டி.ராஜேந்தர் கூறியதாவது:

இலங்கை மக்களுக்காக அங்கு அவர்கள் படும் கஷ்டத்திற்காக இந்தியா 1.9 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கி உதவியுள்ளது. இதற்காக மத்திய அரசுக்கு நன்றி.

இந்த நிலையில் இலங்கையில் பெரும் போராட்டம் நடந்து வருகிறது. அந்த போராட்டத்திற்கு ஆதரவு தரும் வகையில், இலங்கை கவிஞர் அஷ்மின் உடன் இணைந்து, இசையமைப்பாளர் ஜே.சமீல் இசையில், உருவான பாடலை நான் பாடியிருக்கிறேன்.

“நாங்க வாழனுமா சாகனுமா சொல்லுங்க, நீங்க சொல்லுங்க” என்ற பாடலை பாடியுள்ளேன். இலங்கையில் போராடும் மக்களின் படும் அவஸ்தையை, வலியை வெளிப்படுத்தும் விதமாகவே இந்தப்பாடலை பாடியுள்ளேன்.

தமிழ் இலக்கியவாதி அஷ்மின், தமிழ் சினிமாவில் பாடல்கள் எழுதியவர். அவருக்கும் எனக்கும் நெடுங்காலமாக நட்பு உள்ளது. அவர் எழுதியுள்ள இந்தப்பாடலை நான் பாட வேண்டும் என்றார்.

எனவே, இலங்கை மக்கள் படும் பாடு உலகம் முழுக்க தெரிய வேண்டும் என்றே இந்த பாடலை பாடியுள்ளேன். இலங்கை மக்கள் படும் துயரம் நீங்க வேண்டும். இதனை உங்களிடம் தெரிவிக்கவே உங்களை சந்தித்தேன்.

முள்ளிவாய்க்கால் கொடுமைக்கும், இலங்கை தமிழ் மக்களுக்கு இழைத்த கொடுமைக்குமான பதிலடியை ராஜபக்சே தற்போது அனுபவித்து வருகிறார். கர்மா எப்போதும் விடாது.

என் தமிழ் மக்களுக்கு, இலங்கை மக்களுக்கு உலகம் உதவ வேண்டும். இந்த பாடலை அனைவரும் பகிர வேண்டும் பரப்ப வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். – என்றார்.

[embedded content]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *