
வர்த்தக அமைச்சின் செயலாளராக இருந்த பத்ராணி ஜயவர்தன, திறமையின்மை மற்றும் ஊழல் மோசடிகள் காரணமாக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களாக வர்த்தக அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களை சரியான முறையில் முகாமைத்துவம் செய்யவோ அல்லது வழிநடத்தவோ முடியாமல் போனமையால் மக்கள், ஊழியர்கள் மற்றும் நிறுவனங்களின் அதிருப்தி காரணமாக ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பத்ராணி ஜயவர்தன வர்த்தக அமைச்சின் செயலாளராக இருப்பதுடன், பல நிறுவனங்களின் தலைவியாகவும், பல நிறுவனங்களின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
மஹாபொல நெட்வெல்த் நிறுவனம் மற்றும் கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனத்தின் தலைவராகவும் தேசிய சேமிப்பு வங்கி, மக்கள் வங்கி, அபிவிருத்தி லொத்தர் சபை மற்றும் மஹாபொல நிதிச் சபை ஆகியவற்றின் பணிப்பாளர் சபை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
அதற்கமைவாக, அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொள்ள முடியாமல் பொதுமக்களுக்கு ஏற்படும் தொடர்ச்சியான அசௌகரியங்களுக்கு நாட்டின் முக்கிய அமைச்சுக்களில் ஒன்றான வர்த்தக அமைச்சின் செயலாளரே நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டுமென வர்த்தக அமைச்சின் ஊழியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
முன்னாள் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன பல தடவைகள் செயலாளரின் பங்களிப்பை ஜனாதிபதிக்கு அறிவித்து திறமையான செயலாளரை நியமிக்குமாறு கோரியிருந்த போதிலும், இந்த செயலாளரின் பதவி நீக்கத்திற்கு முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதன் பின்னர் அமைச்சின் செயலாளருக்குச் சொந்தமான வாகனத்திற்கு மேலதிகமாக பத்ராணி ஜயவர்தன, தலைவருக்கு உத்தியோகபூர்வமாகச் சொந்தமான மொண்டேரோ ஜீப் வண்டியையும் பயன்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஜீப்பிற்கு 435 லீற்றர் எரிபொருள் பெறப்பட்டதாக ஊழல் அதிகாரி பில்களை சமர்ப்பித்துள்ளார்.