யாழ்ப்பாணம்,ஏப் 27
யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் முதற்தடவையாக மாபெரும் இப்தார் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (2022.04.26) யாழ் பிரதேச செயலர் உயர்திரு.சாம்பசிவம் சுதர்சன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் வரலாற்றில் முதற்தடவையாக இதுவே பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் முதலாவது மாபெரும் இப்தார் நிகழ்வு ஆகும். இவ் இப்தார் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் உயர்திரு. க. மகேசன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
இந் நிகழ்வில் விசேட இப்தார் உரைகளை மௌலவி எம்.ஏ.பைசர் (மதனி – யாழ் மர்யம் மஸ்ஜித்), மௌலவி றழீம் (யாழ் புற நகர் மஸ்ஜித்) மற்றும் ஜனாப் எஸ்.எம். நிஸ்தாக் (யாழ் மாவட்ட முஸ்லிம் கலாசார உத்தியோகத்தர்) உள்ளிட்டோர் நிகழ்த்தியிருந்தனர்.
இவ் இப்தார் நிகழ்வில் யாழ் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், உலமாக்கள், பள்ளிவாசல் நிர்வாகிககள், முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் பிரதிநிதிகள், மகளிர் அமைப்புக்களின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், முஸ்லிம் வர்த்தகர்கள், முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகள், இளைஞர்கள் உள்ளிட்ட நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
பிரதேச செயலக வரலாற்றில் முதற்தடவையாக இவ்வாறானதொரு இப்தார் ஏற்பாட்டை ஒழுங்கு செய்திருந்த பிரதேச செயலர் திரு.சாம்பசிவம் சுதர்சன் அவர்களுக்கு கலந்து கொண்ட முஸ்லிம் மக்கள் விசேடமாந நிகழ்வின் இறுதியில் தமது நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தமை விசேட அம்சமாகும்.


