ஜனாதிபதி தலைமையில் நாளை கட்சிகளுக்கிடையிலான சந்திப்பு

கொழும்பு,ஏப் 28

புதிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் முதற்கட்ட பேச்சுவார்த்தை ஜனாதிபதி தலைமையில் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறவுள்ளது.

இதில் கலந்து கொள்வது தொடர்பாக அழைப்பு விடுக்கப்பட்ட கட்சிகளுக்கு இடையிலான சந்திப்புகள் வியாழக்கிழமை நடைபெற்றிருந்தன.

இதன்படி, வெள்ளிக்கிழமை கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு 40 பேர் கொண்ட சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு தீர்மானித்துள்ளது.

எனினும் ஜனாதிபதியுடன் மாத்திரமே சந்திப்பை நடத்த முடியும் என்று தாங்கள் அறிவித்திருப்பதாக, 40 பேர் கொண்ட சுயாதீன நாடாளுமன்ற அணியின் சார்பில் கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தவிர்த்து அரசாங்கத்தில் உள்ள ஏனைய யாருடனும் கலந்துரையாடுவதற்கு தாங்கள் தயாராக இல்லை என்றும் அவர் அறிவித்துள்ளார்.

முன்னாதாக, சிறிலங்கா சுதந்திர கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேன் ராகவன் மற்றும் சாந்த பண்டார ஆகியோர் இராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில்லை என்ற தீர்மானத்தை சுதந்திர கட்சி எடுத்திருந்தது.

இதேவேளை இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *