என்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானவை. தானோ அல்லது தனது பிள்ளையோ அரச அல்லது தனியார் சொத்துக்களை அபகரித்தால் எந்தவொரு தண்டனையையும் எதிர்கொள்ளத் தயார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு நேற்று (03) வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டை அழித்த திருடர்கள் மொத்தமாக அம்பலமானது என்ற தொனிப்பொருளில் நேற்று விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு, நாட்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பான தகவல்களை உள்ளடக்கிய சுமார் 200 கோப்புகளை வெளியிட நடவடிக்கை எடுதிருந்தது.
இது தொடர்பில் இன்றைய ஊடக சந்திப்பில் பதில் வழங்கிய மைத்திரி,
நானோ அல்லது எனது பிள்ளையோ எங்கள் வாழ்நாளில் எங்காவது அரச சொத்து அல்லது தனியார் சொத்து மோசடி செய்திருந்தால், நான் எந்த தண்டனைக்கும் ஆளாவேன்.
இன்று காலை நாடாராளுமன்றத்தில் அநுர திஸாநாயக்க எனக்கு அருகில் அமர்ந்திருந்தார். நேற்று இந்த செய்தியாளர் சந்திப்பு குறித்து நான் அநுர திஸாநாயக்கவிடம் கேட்டேன்.
எனக்கும் என் பிள்ளைகளுக்கும் பணம் போய்விட்டதாகச் சொன்னீர்கள், ஏன் இப்படிச் சொன்னீர்கள் என வினவினேன்.
மேலும் இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. மத்திய வங்கி மோசடியின் பணம் எனது குடும்பத்திற்கு வந்தது என்ற குற்றச்சாட்டை நான் முற்றாக மறுக்கிறேன்.
அந்த ஆவணங்களில் எனது அல்லது எனது பிள்ளைகளின் பெயர்கள் ஏதேனும் இருந்தால் இன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்குமாறு வசந்த சமரசிங்கவிடம் கேட்டுக்கொள்கிறேன்.
பின்னர் இவ்விடயம் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தவும் என குறிப்பிட்டுள்ளார்.