
போக்குவரத்து, சுகாதாரம், ரயில், மின்சாரம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள 1000க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து இன்றைய தினம் (மே 6) அரசாங்கத்திற்கு எதிராக நாடு தழுவிய அளவில் மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த உள்ளன.
மேலும் இந்த ஹர்த்தாலில் வங்கிகளின் தொழிற்சங்கங்கள், இலங்கை மின்சார சபை (CEB), இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.
ஹர்த்தாலுக்கு ஆதரவளிப்பதாக அகில இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக புற்றுநோய், மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனைகள் தவிர அனைத்து மருத்துவமனைகள் மற்றும் அலுவலகங்களில் பணியாற்றும் தங்கள் சங்கத்தில் உள்ள அனைத்து மருத்துவர்களும் அன்றைய தினம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) மருத்துவர்கள் வேலை செய்வார்கள் ஆனால் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக கையில் கருப்பு பட்டை அணிவார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இலங்கை குடிவரவு குடியகல்வு உத்தியோகத்தர் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் சில்க் ரோடு (CIP) உட்பட நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் உள்ள பிரமுகர்களுக்கான குடிவரவு மற்றும் குடியகல்வு கடமைகளில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளது.