
கொழும்பு,மே 07
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒரு வாரகாலத்தை போராட்ட காலமாக அறிவிக்க தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை ஒரு வாரம் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுக்க தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தீர்மானித்துள்ளது.
தற்போதைய அரசாங்கத்தை பதவியில் இருந்து அகற்றுவதற்கு தொழிற்சங்கங்கள் மேற்கொள்ளவுள்ள எதிர்கால நடவடிக்கைகள் குறித்து சனிக்கிழமை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மே 11ஆம் திகதி பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தவும், 17ஆம் திகதி நாடாளுமன்றத்தை முற்றுகையிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஐக்கியதேசியக் கட்சியின் தலைவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டின் முன்பாக சனிக்கிழமை முற்பகல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, முன்னாள் பிரதமருக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறும், பதாதைகளை ஏந்தியவாறும் ஒரு தரப்பு போரட்டத்தினை முன்னெடுத்தனர். மேலும், குறித்த பகுதியில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாகவும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதால், குறித்த பகுதியில் பதற்றமான சூழ்நிலையும் ஏற்பட்டிருந்தது.