அரசியல் அராஜக நிலையில் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டுமென்றால், நாட்டின் சட்டவாக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசியல் ஈடுபாடுகளை தற்காலிகமாக ஓரம் தள்ளிவிட்டு பொது இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும்.
அத்துடன் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து தேசிய ஐக்கிய அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என முன்னாள் சபாநாயகரும் சமூகநீதிக்கான தேசிய அமைப்பின் தலைவருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அரசியல் ரீதியாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து இருக்கும் நாம், பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு முதல், ஏற்பட்டிருக்கும் துர்ப்பாக்கிய நிலையில் இருந்து நாட்டை காப்பாற்றிக் கொள்வதற்கு அதிக கவனம் செலுத்த வேண்டி உள்ளது. அது அத்தனை இலகுவான விடயம் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த நெருக்கடி நிலையில் இருந்து நாட்டை மீட்பதற்கு நாட்டினுள் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணுவது பிரஜைகளின் அதி முக்கிய கடமை என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம். அதன் காரணத்தினால் எமது தாய் நாட்டின் எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி அமைதியான முறையில் நாட்டுக்காக முன்வருமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
அதேபோன்று மக்கள் நேய கோட்பாடுகளை பின்பற்றி நாட்டு மக்களின் வாழ்க்கை நிலையை இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டியது இந்த நாட்டின் அரசியல் கட்சிகளினதும், சிவில் சமூகங்களினதும் முதற் கடமையாகும்.
இரண்டாவது நடவடிக்கையாக, நாடு அராஜக நிலைக்கு செல்வதை தடுக்கும் முகமாக ஜனநாயக கோட்பாடுகளுக்கு அமைய நாட்டின் ஆட்சி வியூகங்களை மீள் கட்டமைக்க வேண்டும்.
மூன்றாவதாக நாட்டின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அதற்காக அனைத்து தரப்பினரும் இளம் சமுதாயத்தினரின் குரலுக்குச் செவிமடுக்க வேண்டும். அதேபோன்று நாட்டின் அரசியல் மறுசீரமைப்பு செயற்பாடுகளுக்கும் அவர்களின் பங்களிப்பை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன் தற்போது காணப்படும் அரசியல் அராஜக நிலையில் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டுமென்றால், பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசியல் ஈடுபாடுகளை தற்காலிகமாக ஓரம் தள்ளிவிட்டு. பொது இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும் என்பதை நாம் உறுதியாக நம்புகின்றோம்.
இதன்போது நாங்கள் தேசிய ஐக்கிய அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். முறையாக திட்டமிடப்பட்ட வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதற்காக நடைமுறை சாத்தியமாக நிறுவப்படும் அனைத்துக் கட்சி அரசாங்கத்தில், குறைந்த அளவிலான உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையைக் கொண்டு நாட்டை வழி நடத்தும் கடமை எமக்கு இருக்கின்றது. இது வழமையான ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் கொண்ட பாராளுமன்றமாக இருக்கக் கூடாது. இந்த அரசாங்கம் தேசிய ஐக்கிய அரசாங்கமாக அமைய வேண்டும்.
இந்த அரசாங்கத்தின் ஊடாக நாட்டின் அரசியல் திருத்தங்களையும் வீழ்ச்சியடைந்து இருக்கும் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் மீளக் கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்விடயங்களை நிறைவேற்றிக் கொண்ட பின்னர் 12 மாதங்களுக்குள் புதிய ஆட்சியை உருவாக்கிக் கொள்வதற்கு பொதுத்தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தேசிய ரீதியாக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டிய அத்தியாவசிய விடயங்களுக்காக சமூக நீதிக்கான தேசிய இயக்கம் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் உதவுவதற்கு தயாராக இருக்கும் அதேவேளை நாட்டுக்காக எம்மிடம் வழங்கப்படும் எந்த ஒரு பொறுப்பையும் அரசியலுக்கும் குறுகிய எண்ணங்களுக்கும் அப்பாற்பட்டு ஆற்றுவதற்கு தயாராக இருப்பதையும் உறுதி செய்கின்றோம்.- என்றுள்ளது.