ராஜபக்ஷக்களை பாதுகாக்கும் அரசாங்கமாக இடைக்கால அரசாங்கம் அமைந்து விடக்கூடாது! – சம்பிக்க

நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு இட்டுச் சென்ற ராஜபக்ஷக்களை பாதுகாக்கும் அரசாங்கமாக இடைக்கால அரசாங்கம் அமைந்து விடக்கூடாது. மாறாக நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க கூடிய குறுகிய மற்றும் மத்திய கால தீர்வுகளை கொண்ட சர்வகட்சி அரசாகவே அது அமைய வேண்டும் என்று தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க, அவ்வாறான அரசாங்கமொன்றை நிறுவுவதற்கு இடமளிக்கும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியை துறக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

உத்தேச இடைக்கால அரசாங்கம் செயற்பட வேண்டிய முறைமை தொடர்பில் முன்வைத்துள்ள பரிந்துரைகளிலேயே சம்பிக ரணவக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த பரிந்துரைகளில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது :

புதிய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிக்கும் போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களது வேண்டுகோள்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

அவ்வாறே நாடு முகம் கொடுத்துள்ள பாரதூரமான நிலையில் இருந்து விடுபடுவதற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நாடு முகம் கொடுத்துள்ள பாரதூமான சிக்கல்களில் இருந்து விடுபடுவதற்கு பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

சர்வகட்சி அரசாங்கம் ராஜபக்ஷகளைக் காப்பாற்றி அவர்களுக்கு மன்னிப்பு வழங்க தமது நேரத்தை ஒதுக்குவது என்பது காலத்தின் தேவை அல்ல.

மாறாக முக்கிய விடயங்களில் கவனம் செலுத்தி தீர்க்கமான முடிவொன்றை எட்ட வேண்டும். நாம் எதிர்கொண்டுள்ள பொருளாதார , அரசியல் பிரச்சினையில் இருந்து விடுபட முதலில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டும்.

இதுவரை காலம் கொள்ளையடித்து நாட்டை அழிவுக்கு உள்ளாக்கி வங்குரோத்து நிலைமைக்கு இட்டுச் சென்று ராஜபக்சாக்களை பாதுகாக்கும் அரசாங்கமாக இடைக்கால அரசாங்கம் அமைந்து விடக்கூடாது.

மாறாக நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க கூடிய குறுகிய மற்றும் மத்திய கால தீர்வுகளை கொண்ட சர்வகட்சி அரசாக அமைய வேண்டும்.

அவ்வாறான அரசு ஒன்றை நிறுவுவதற்கு இடமளிக்கும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவியை துறக்க வேண்டும்.

அத்தோடு அவர் விலகும் திகதி காலம் என்பன தெளிவாக அறிவிக்கப்பட வேண்டும். மேலும் உத்தேச இடைக்கால அரசாங்கம் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை உடனடியாக நீக்க வேண்டும்.

ஜனாதிபதியுடைய அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்பதோடு , சுயாதீன ஆணைக்குழுக்கள் போன்ற ஜனநாயக அரசியல் அமைப்பு முறையினை நிறைவேற்ற வேண்டும்.

அரசியல் கட்சிகள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்பட்டு அவற்றுக்கு கிடைக்கும் பொருளாதார உதவிகள் , ஊடக பிரச்சார நேரம் போன்றன தொடர்பாக தெளிவாக முன்னெடுக்கப்பட கூடியவகையில் மீண்டும் தேர்தல்கள் தொடர்பான சட்ட திட்டங்கள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.

மேலும் ஹொங்கொங் மற்றும் சிங்கப்பூரில் காணப்படுவது போல் ஊழல் ஒழிப்பு நிர்வாகம் ஒன்றை நிறுவ வேண்டும். இடைக்கால அரசு மக்களுக்கு விருப்பமான அரசாங்கம் ஒன்றை தெரிவு செய்து கொள்ளக்கூடிய வகையில் சுயாதீனமாக செயற்பட்டு தேர்தல்களை நடத்தக்கூடிய சுதந்திரமான ஒரு சூழலை உருவாக்க வேண்டும். அத்தோடு தேர்தல் ஆணைக்குழுவிற்கு சுதந்திரமாக செயற்படுவதற்கு பூரண அவகாசம் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *