
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அத்தியாவசியமான – அவசரத் தேவையாகவுள்ள உயிர்காக்கும் மருந்துகளை புலம்பெயர் நன்கொடையாளர்களிடமிருந்து நேரடியாகப் பெற்றுக் கொள்வதற்கு வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளார் என்று நம்பகரமாகத் தெரியவருகின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துத் தட்டுப்பாட்டை அடுத்து கொழும்பு சுகாதார அமைச்சு சில அறிவுறுத்தல்களை மாகாண மற்றும் தேசிய மருத்துவமனைகளுக்கு விடுத்தது.
நன்கொடையாளர்களிடமிருந்து நேரடியாக மருந்துகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அது தொடர்பான விவரங்களை தமக்கு அனுப்பி வைத்தால் போதுமானது எனவும் அறிவுறுத்தியிருந்தது.
இதற்கு அமைவாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சு மற்றும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை என்பன மருந்துகளை நன்கொடையாளர்களிடமிருந்து பெற்றுக்கொண்டன.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையால் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒரு தொகுதி மருந்துகளுக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதற்கு அமைவாக சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கமும் அதனை வழங்க இணங்கியிருந்தது.
இந்த நிலையில் மூன்று தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை வட்டாரங்களை தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்ட வடக்கு ஆளுநர், தனக்குத் தெரியாமல் அதனை எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம் என்று கேட்டுள்ளார்.
அதேதினத்தில், தனக்குத் தெரியாமல் எந்தவொரு நன்கொடையாளரிடமிருந்தும் மருந்துப் பொருள்களைப் பெற்றுக் கொள்ளக்கூடாது என்று வடக்குமாகாண சுகாதார அமைச்சுக்கும் ஆளுநர் வாய் மொழிமூலமான பணிப்புரையையும் விடுத்துள்ளார்.
இதேவேளை- வடக்கு மாகாண ஆளுநர் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்துக்கு நன்கொடையாளர்களிடமிருந்து கிடைக்கப்பெற்றதாகத் தெரிவித்து, இதுவரை 3 தடவைகள் மருந்துப் பொருள்களைக் கையளித்துள்ளார்.
ஆனால், அந்த நன்கொடையாளர்கள் யார்? அவர்கள் வழங்கிய உதவித் தொகை எவ்வளவு? என்ற விவரங்களை அவர் வழங்கவில்லை.
அதேவேளை மூன்று தடவைகளும் கொழும்பைச் சேர்ந்த ஒரே நிறுவனத்தின் ஊடாகவே மருந்துப் பொருள்கள் கொள்வனவு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.
அந்த நிறுவனம் கொரோனா இடர்காலப் பகுதியில், அன்டிஜென் சோதனைக் கருவிகளைக் குறைந்த விலையில் கொள்வனவு செய்து அரசுக்கு கூடிய விலையில் விற்பனை செய்ததாகக் குற்றஞ் சுமத்தப்பட்டு சர்ச்சையில் சிக்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.