
பார்வையற்றவர்களில் இதுவரை 85 பேர் பட்டதாரிகளாக வெளியேறியுள்ளனர் என யாழ் விழிப்புலன் அற்றோர் சங்கத்தின் தலைவர் சுதாகரன் தெரிவித்துள்ளார்.
சங்கத்தின் 45 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பார்வையற்றவர்களுக்கான சங்கம் அமைக்கப்படுவதற்கு முதல், பார்வை அற்றவர்கள் காட்சிப் பொருளாக இருந்தார்கள், ஏன் பிறந்தோம் என்ற மன விரக்தியில் இருந்தார்கள். அந்த கால கட்டத்திலேயே தான் மூவர் சேர்ந்து இந்த சங்கத்தை அமைத்தனர்.
இன்று அது 46 ஆண்டுகளாக வளர்ந்து நிற்கிறது. இப்போது எமது சங்கம் கொடிகட்டி பறக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது. இதுவரை 85 பார்வை அற்றவர்களை நாம் பட்டதாரிகளாக உருவாக்கி இருக்கின்றோம். 22 பேர் தற்போது பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கின்றனர்.
பார்வை அற்ற ஒருவர் நிறுவனம் ஒன்றை நடத்துகிறார் என்றால், அது யாழ் விழிப்புலன் அற்றோர் சங்கத்தின் பிள்ளையாக இருப்பார் என்பதில் நாம் பெருமை அடைகின்றோம்.
கண் தெரியாதவர்கள் பாடுவார்கள் என்று தான் கேள்விபட்டு இருப்பீர்கள். ஆனால் இன்று சட்ட மேதைகளாகவும், தொழில் அதிபர்களாவும் பலர் வளர்ந்து நிற்கின்றனர்.- என்றார்.