இலங்கையில் எங்கள் குடும்பங்கள் உணவுக்காக கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்! – தமிழகத்தில் தொடரும் உண்ணாவிரத போராட்டம்

கடல் வழியாக இந்தியாவிற்கு சென்றமையாலும், இந்திய கடவுச்சீட்டு பெறுவதற்கு முயற்சித்த குற்றத்திற்காகவும் கைது செய்யப்பட்டு இன்றுவரை தமிழக சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள், தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்து, இன்று நான்காவது நாளாக உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மூன்று வருடங்களாக தடுத்த வைக்கப்பட்டுள்ள நாம் எமது குடும்பங்களோடு சேர்ந்து வாழ உதவுங்கள் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.

மேலும் அவர்கள் தெரிவிக்கையில்,

சுட்டெரிக்கும் இந்த கொடூரமான வெயிலில் எங்கள் உணர்வுகளும், உயிரும் உருகி போனாலும் ஏற்கத் தயார் என்ற மனநிலையோடு எங்கள் வாழ்க்கையை போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

எங்கள் குடும்பங்கள் மறுவாழ்வு முகாம்களிலும், காவல்துறை பதிவுகளிலும் உணவுக்கு அல்லல்படும் நிலையில் வாழ்கின்றனர்.

இலங்கையில் எங்கள் குடும்பங்கள் உணவுக்காக கையேந்தும் மிக வேதனையான நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர்.

உழைக்க வேண்டிய நாங்கள் உழைக்க வேண்டிய வயதில், உழைக்க வேண்டிய காலத்தில், இங்கு காலங்களை வீண் விரயம் செய்து கொண்டிருக்கிறோம்.

எங்கள் குடும்பங்களையும் எங்கள் பச்சிலம் குழந்தைகளையும் பார்க்க முடியாததை நினைக்கும்போது, இந்த உண்ணாமல் இருக்கும் நிலைகூட எதுவுமற்ற ஒன்றாய் தோன்றுகிறது.

எங்கள் குடும்பங்களோடு சேர்ந்து வாழவையுங்கள் என எங்கள் தமிழ் உறவுகளிடமும் அனைத்து தொலைக்காட்சி நண்பர்களிடமும், இந்திய – இலங்கை அரசுகளிடமும் மிக தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறோம். – என்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *