
காரைநகர் பகுதியில் எரிவாயு விநியோக வாகனத்தை மறித்த மக்கள் எரிவாயு சிலிண்டர்களை வழங்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டதனால் இராணுவத்தின் உதவியுடன் வாகனம் வெளியேறியது.
யாழ்ப்பாணம் காரைநகர் பகுதி வர்த்தக நிலையங்களிற்கு யாழ்ப்பாணம் விநியோக நிலையத்தில் இருந்து எரிவாயு சிலிண்டர்கள் வாகனத்தில் எடுத்துச் சென்றுள்ளனர்.
அந்த வேளை ஓர் வர்த்தக நிலையம் முன்பாக பலர் வரிசையில் காத்திருந்து வாகனத்தையும் மறித்து முழுமையான எரிவாயு சிலிண்டர்களையும் இதே இடத்தில் விநியோகம் மேற்கொள்ளுமாறு கோரிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விநியோக வாகனத்தில் இருந்த பணியாளர்கள் ஏனைய வர்த்தக நிலையங்களிற்கான எரிவாயு சிலிண்டர்கள் மட்டுமே இருப்பதனால் அவ்வாறு வழங்க முடியாது, ஏனெனில் ஏனைய வர்த்தக நிலையங்களிலும் மக்கள் காத்திருக்கின்றனர் எனக் கூறியபோது குழப்ப நிலை ஏற்பட்டது.
இதனால் இராணுவத்தின் உதவியுடன் எரிவாயு விநியோக வாகனம் வெளியேறியது.