ந.பரமேஸ்வரன்
தமிழக அரசின் நிவாரண உதவி தமக்கும் கிடைக்குமா அல்லது வழமை போலவே சிங்கள ,முஸ்லிம் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட பின், தமிழர்களுக்கும் கிள்ளி தெளிக்கப்படுமா என்பதே இப்போது தமிழ் மக்கள் மத்தியில் உள்ள கேள்வி. இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இன்று வரையும் தமிழர்களைக் காட்டியே பிச்சையெடுத்து வயிறு வளர்த்து வந்துள்ளது. இதற்கு இலங்கையை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் எவருமே விதி விலக்கில்லை என்றும் சொல்லலாம்.
இவ்வாறு தமிழர்களைக்காட்டி பிச்சையெடுத்து அதை திசை திருப்பிய அல்லது வேறு தேவைகளுக்கு பயன்படுத்தியமைக்கு பல உதாரணங்களை எடுத்துக்காட்டலாம்.
மகாவலித் திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட போது கனேடிய அரசாங்கம் நிதியுதவி அளிக்க முன்வந்தது. அப்போது இந்தத்திட்டம் வடபகுதி (தமிழர்களுக்கு) நன்மை பயக்கும் திட்டம் என்றே ஸ்ரீலங்கா அரசால் கூறப்பட்டது . ஆனால் நடந்ததோ சிங்களக் குடியேற்றம்.
இதே போல் யாழ்ப்பாண நூலகம் புனரமைக்கப்பட்ட போது, “யாழ்ப்ப்பண நூலகத்தைப் புனரமைப்பதற்கு செங்கல்லும் புத்தகங்களும் அன்பளிப்புச்செய்யுங்கள் ” என (books and bricks) ஜனாதிபதி சந்திரிகா உலகம் முழுவதும் பிரசாரம் செய்தார். பல கோடிக்கணக்கான பணம் அன்பளிப்பாக கிடைத்தது . அப்படிக் கிடைத்த பணம் எவ்வளவு என்று யாருக்கும் தெரியாது.
ஆனால் யாழ்ப்பாண நூலகத்தைப் புனரமைப்பதற்குச் செலவிடப்பட்ட பணம் 120 மில்லியன் ரூபா மட்டுமே. நூலகப் புனரமைப்பு சம்பந்தமான கூட்டங்களுக்கு அப்போது மாநகரசபை முதல்வராக இருந்த ரவிராஜுக்கு அழைப்பு விடப்படுவதில்லை; ஒரு நாள் நூலகப் புனரமைப்புத் தொடர்பான கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை பலவந்தமாக ரவிராஜ் கூட்டத்தில் பங்குபற்ற முற்பட்டார்.
எனினும் அவர் பலவந்தமாக வெளியேற்றப்பட்டார். இந்தப் புனரமைப்புக் குழுவில் தமிழினத்தைச் சேர்ந்த, ஜனாதிபதி சட்டத்தரணிகள் சிலரும் உள்ளடக்கப்பட்டிருந்தனர்.
ஒருவேளை அவர்கள் இப்போதாவது வாய்திறந்தால் , நூலகப் புனரமைக்கு எவ்வவு தொகை சேர்ந்தது என்ற உண்மை வெளிவரலாம்.
முன்பு ஒரு முறை சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் மூதூரில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நிவாரணம் வழங்க முற்பட்டது. அப்போது முஸ்லிம்கள் தங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் எனக்கோரி, மூதூர் சர்வதேச செஞ்சிலுவைச்சங்க அலுவலகத்தை அடித்து நொருக்கினர்.
யுத்தம் முடிந்த கையுடன் ஐ.நா.நிவாரண உதவியின் கீழ் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென வழங்கப்பட்ட உழவு இயந்திரங்களில் சிங்கள,முஸ்லிம் மக்களுக்கும் வழங்க வேண்டுமென ஆளுநர் வலியுறுத்திய போது, ஐ.நா அதிகாரி தலையில் அடித்துக்கொள்ளும் புகைப்படம் சண்டே ரைம்ஸ் பத்திரிகையின் முதல் பக்கத்தில் பிரசுரமாகியிருந்தது.
ஐரோப்பிய ஒன்றியம்,பிரிட்டன் போன்றன யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு=கிழக்கு மக்களுக்கு வீடு கட்டுவதற்கென வழங்கிய யூரோக்களுக்கு என்ன நடந்தது என்பது இதுவரை யாருக்கும் தெரியாது.
இப்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சிக்கல்களால் தமிழகத்துக்கு மீண்டும் அகதிகள் புறப்படத் தொடங்கியதையடுத்து தமிழக அரசு இலங்கைத் தமிழர்களுக்கு உதவ முன் வந்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சாளர் சுமந்திரன், தமிழ் முற்போக்கு கூட்டணி மனோ கணேசன் ஆகியோர் ”தமிழ் மக்களுக்கு மட்டும் என அனுப்ப வேண்டாம், மூவின மக்களுக்கும் சேர்த்து அனுப்புங்கள் ” என தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தனர்.அதையடுத்து இப்போது இலங்கை மக்களுக்கு உதவி என்ற பெயரில் 123 கோடி ரூபா (இந்திய ரூபா) மதிப்புள்ள உதவிப்பொருட்கள் இலங்கைக்கு கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தக் கப்பலை கொடியசைத்து வழியனுப்பியுள்ளார். இதில் தமிழக நாடளுமன்ற உறுப்பினர்களின் பணம், எதிர்கட்சித்தலைவர் பன்னீர்செல்வத்தின் 50 இலட்சம் ரூபா மற்றும் தமிழக அரச ஊழியர்கள் சிலரின் அன்பளிப்புகள் என்பனவும் அடங்கியுள்ளன. இவற்றை விட இரண்டு யாசகர்கள் சேமித்த 60,000 இந்திய ரூபாவும் அடங்கியுள்ளது. ஒருவர் 50,000 ரூபாவும் மற்றவர் 10,000 ரூபாவும் அன்பளிப்பு செய்துள்ளனர். இவற்றை விட முஸ்லிம் சிறுமி ஒருவரும் தனது சேமிப்பை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
தமிழில் பேச்சு வழக்கில் ’பிச்சை எடுத்ததாம் பெருமாள் அதை தட்டிப்பறித்ததாம் அனுமார் ’என்று கூறுவார்கள். ஆனால் இங்கே பிச்சைக்காரர்கள் பிச்சை போடும் நிலையில் தான் ஸ்ரீலங்காவின் நிலைமை உள்ளது. இதற்கு முழுக்காரணம் ராஜபக்சக்கள் தான் என்பது பச்சைக்குழந்தைக்கும் தெரிந்த விடயம்.
இலங்கைத்தமிழர்களுக்கு அல்லது இலங்கையர்களுக்கு என தமிழக அரசு வழங்கிய உதவிப்பொருள்கள் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இலங்கைத்தமிழர்களுக்கு இந்திய அரசு உதவுவது இது முதல் முறையல்ல . 1987 ஆம் ஆண்டு இந்திய விமானப்படையின் மிராஜ் ரக விமானங்கள் ’ஒப்பிரேஷன் பூமாலை’ என்ற பெயரோடு யாழ்ப்பாணத்தில் உலர் உணவுப்பொதிகளை வீசியபோது அவை நேரடியாக பொதுமக்களின் கைகளிலேயே போய்ச்சேர்ந்தன.
தற்போது தமிழக அரசு அன்பளிப்பு செய்துள்ள உதவிப்பொருள்கள் ஸ்ரீலங்கா அரசிடமே கையளிக்கபட்டுள்ளது. இந்த உதவிப்பொருள்களில் எவ்வளவு அல்லது எத்தனை வீதம் தமிழர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படப்போகிறது என்பதே இப்போது உள்ள கேள்வி. தமிழக அரசின் உதவிப்பொருள்களில் அரைவாசியாவது (50% மாவது )வடக்கு ,கிழக்கு மலையக மக்களுக்கு போய்ச்சேர வேண்டும் என்பதை தமிழக அரசு இந்திய தூதரகம் ஊடாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் அன்பளிப்பாக கிடைத்த இந்த உதவிப்பொருள்களை ஸ்ரீலங்கா எவ்வாறு பங்கிடப்போகிறது என்பதையும் தமிழக அரசு கண்காணிக்க வேண்டும். இல்லையேல் தமது தொப்புள் கொடி உறவுகளுக்கு என தமிழக உறவுகள் அனுப்பிய உதவி வழமை போல் திசை திருப்பப்படக்கூடும்.
இதற்கிடையே தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு கிலோ அரிசிக்கு சந்தை விலையை விட பத்து ரூபா கூடுதலாக கொடுத்து கொள்வனவு செய்ததாக பொதுநல வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தானம் கொடுக்கிற மாட்டுக்கு பற்கள் ஒழுங்காக உள்ளனவா? என்று பார்க்கக்கூடாது என்று சொல்வார்கள். எனவே நாகரிகம் கருதி, அந்த விடயத்தை விட்டு விடுவோம். அதைத் தமிழக உறவுகள் பார்த்துக்கொள்ளட்டும். எமக்கென வருகிற பொருள்களில் அரைவாசியாவது எமக்கு (வடக்கு,கிழக்கு ,மலையக மக்களுக்கு) போய்ச்சேர்வதை தமிழக அரசு உறுதிப்படுத்தினால் போதும்.