நிலையான வேலைத்திட்டம் இல்லாத அரசாங்கத்திற்கு எந்தவொரு நாடும் ஆதரவளிக்காது

கொழும்பு, மே 25

இன்றும் பாராளுமன்றத்தில் திரிபுபடுத்தப்பட்ட மொட்டு பெரும்பான்மையே உள்ளதாகவும், நிலையான வேலைத்திட்டம் இல்லாத அரசாங்கத்திற்கு எந்தவொரு நாடும் ஆதரவளிக்காது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாடு எதிர்நோக்கும் தற்போதைய நிலைமை தொடர்பில் நாட்டிலுள்ள முன்னணி தொழிற்சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (25) இடம் பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசாங்கத்தைப் பெறுவதற்கு அல்லது சர்வ கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எவ்வாறு செயற்படுவது என்பது குறித்த தீர்மானமானது நிலையானது எனவும், பட்டம் பதவிகளுக்காக ஒருபோதும் கொள்கைகளை காட்டிக்கொடுக்க மாட்டோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இந்நாட்டு மக்கள் கோரும் மாற்றத்திற்கு ஒருபோதும் துரோகம் இழைக்கப்போவதில்லை எனவும் போராட்டத்தை சீர்குலைக்கும் வேலைத்திட்டத்திற்கு தானும் ஐக்கிய மக்கள் சக்தியும் பங்களிக்கப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியால் முன்மொழியப்பட்ட அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் முற்றிலும் தூய்மையான திருத்தமாகும் எனவும், இது ஜனநாயகத்தை நிலைநாட்டும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட உயர்மட்ட திருத்தம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழித்தலும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமரை உருவாக்காமலும் அதிகாரங்களை கட்டுப்படுத்தும் தடைகள் மற்றும் சமன்பாடுகள் முறைமைக்கு நாட்டைக் கொண்டுவரும் நோக்கில் இந்த திருத்தம் மேற்கொள்ளப்ப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *