நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மக்கள் ஜனாதிபதி கோட்டபாய தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் காலிமுகத்திடல் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்ட களமான கோட்டா கோ கம தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் ஒரு மாதத்தை கடந்த நிலையிலும் தொடர்கின்றது.
இந்நிலையில் புதிய பிரதமரான ரணில் விக்கிரமசிங்க கோட்டா கோ கம ஆர்ப்பாட்ட களத்திற்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது என அறிவித்திருந்தார்.
அதேவேளை கோட்டகோகமவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் தமது முன்மொழிவுகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் எந்தவொரு பிரச்சினையையும் சமர்ப்பிக்க ஏதுவாக பிரதமர் அலுவலகம் விசேட இணையத்தளமொன்றை ஆரம்பித்துள்ளது.
https://www.gggdelegation.com/ என்கின்ற இணையதளத்தினூடாக ஆர்ப்பாட்டகாரர்கள் எதிர்கொள்ளும் எந்தவொரு பிரச்சினையையும் சமர்ப்பிக்க முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
அதேவேளை இந்த இணையத்தின் ஊடாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்புகளை மேற்கொள்ளமுடியும் என்பதுடன் நடைமுறை மற்றும் ஆக்கபூர்வமான முன்மொழிவுகளை முன்வைப்பவர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாட அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
