கடல் வழியாக இந்தியாவிற்கு சென்றமையாலும், இந்திய கடவுச்சீட்டு பெறுவதற்கு முயற்சித்த குற்றத்திற்காகவும் கைது செய்யப்பட்டு இன்றுவரை தமிழக சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள், தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்து, இன்று 9வது நாளாக உணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மூன்று வருடங்களாக தடுத்த வைக்கப்பட்டுள்ள நாம் எமது குடும்பங்களோடு சேர்ந்து வாழ உதவுங்கள் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.
மேலும் அவர்கள் தெரிவிக்கையில்,
வணக்கம் மதிப்புக்குரிய முதலமைச்சர் ஐயா அவர்களே, எங்கள் தொப்புள் கொடி உறவுகளான தமிழ் உறவுகளே, நாங்கள் இன்று 9வது நாளாக எங்கள் உண்ணாவிரத போராட்டத்தினை வேதனையோடு தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.
எங்களில் தொடக்கத்தில் இருந்த 10 பேரில் 8 பேரின் நிலை கவலைக்கிடமாக இருந்ததால் அவர்கள் தற்பொழுது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவசர சிகிச்சைப் பிரிவிலேயே தற்பொழுது சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
9 நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் இருக்கும் இருவரின் நிலை கவலைக்கிடமாக தான் உள்ளது. அவர்கள் வைத்தியசாலைக்குப் போக மறுத்து, தங்கள் விடுதலைக்காக இங்கேயே உயிரை மாய்க்க கூடிய அளவிற்கு காத்திருக்கிறார்கள்.
நேற்று இன்னும் புதிதாக 6 பேர் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இன்று தற்போது புதிதாக ஒருவர் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்.
தற்போது உண்ணாவிரத போராட்டம் கொட்டகையில் 9 பேரும், வைத்தியசாலையில் 8 பேரும் ஆக மொத்தமாக 17 பேர் இந்த உண்ணாவிரத போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
எங்களது ஒரே ஒரு வேண்டுகோள் யாதெனில் எங்களுக்கான விடுதலையை பெற்றுக் கொடுங்கள் நாங்கள் தொடக்கத்திலிருந்து கூறும் ஒரே ஒரு விடயம், எங்களை விடுவித்து, எங்கள் குடும்பங்களோடு வாழ விடுங்கள்.
முதல்வர் ஐயா எங்களுக்காக கைகொடுங்கள். எங்கள் தமிழ் உறவுகளே எங்களுக்காக குரல் கொடுங்கள்.
எவருமே உதவிக்கு வராது மிகவும் வேதனைக்கு உள்ளாக்குகிறது. நாம் அனைத்து உறவுகளையும் வேண்டிக்கொள்வது தயவு செய்து எங்களுடைய போராட்டத்திற்காக குரல் கொடுங்கள் எங்கள் வாழ்க்கையை மீட்டுக் கொடுங்கள்.- என்றுள்ளனர்.




பிற செய்திகள்