இரண்டாவது ரி-20: பங்களாதேஷ் அணிக்கு சிம்பாப்வே பதிலடி

பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில், சிம்பாப்வே அணி 23 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரை 1-1 என்ற கணக்கில் சிம்பாப்வே அணி சமநிலைப் படுத்தியுள்ளது.

ஹராரே மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, வெஸ்லி மாதேவரே 73 ஓட்டங்களையும் ரியான் பர்ல் ஆட்டமிழக்காது 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில், சொரிபுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளையும் மெயிடி ஹசன் மற்றும் சகிப் அல் ஹசன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 167 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பங்களாதேஷ் அணி, 19.5 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 143 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் சிம்பாப்வே அணி 23 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஷமீம் ஹொசைன் 29 ஓட்டங்களையும் அபீப் ஹொசைன் 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

சிம்பாப்வே அணியின் பந்துவீச்சில், லுக் ஜோங்வே மற்றும் வெலிங்டன் மசகட்சா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் டென்டாய் சட்டாரா மற்றும் பிளெஸிங் முஸரபானி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 57 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 5 பவுண்ரிகள் அடங்களாக 73 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட வெஸ்லி மாதேவரே தெரிவுசெய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *