பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் அரசு அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது! – அமெரிக்க தூதுவரிடம் பீரிஸ் தெரிவிப்பு

அரசமைப்பின் 21 ஆவது திருத்த சட்ட வரைவு தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளுடனான கலந்துரையாடல்கள் தொடர்பிலும், பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் நல்லிணக்கம் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு தொடர்பிலும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங்கிற்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோருக்கிடையில் கடந்த வெள்ளியன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

மேலும் இருதரப்பு உறவுகள், தற்போதைய உள்நாட்டு அபிவிருத்திகள் மற்றும் நாடு எதிர்கொள்ளும் சவால்களைத் தணிப்பதற்கான சர்வதேச சமூகத்தின் உதவி ஆகியன குறித்து பரந்தளவில் கலந்துரையாடப்பட்டது.

மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களைப் போக்குவதற்கும், தெளிவான செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் குறுகிய மற்றும் நீண்ட கால தீர்வுகளை வழங்குவதற்கு சாத்தியமான அனைத்து வழிகளையும் ஆராய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் இதன் போது குறிப்பிட்டார்.

இவ்வாறானதொரு நிலையில், பலதரப்பு நிறுவனங்கள் உட்பட சர்வதேச சமூகத்திடமிருந்து கிடைக்கப் பெறும் ஒத்துழைப்புக்களுக்கு அமைச்சர் பீரிஸ் பாராட்டு தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதார சவால்களைத் தணிப்பதற்காக இருதரப்பு மற்றும் பலதரப்பு வழிகள் மூலம் அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளின் தொடர்ச்சியான ஆதரவை அமைச்சர் ஊக்குவித்தார்.

நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கின் ஆட்சியை மேம்படுத்துவதற்கும் பேணுவதற்கும் அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகள் குறித்தும், கருத்துச் சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடுதல் ஆகியவற்றுக்கான அனைவரினதும் உரிமைகளையும் மதிக்கும் முயற்சிகள் குறித்தும் அமைச்சர் பீரிஸ் அமெரிக்கத் தூதுவருக்கு விளக்கினார்.

அரசியலமைப்பின் 21 வது திருத்தச் சட்ட வரைவு தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளுடனான கலந்துரையாடல்கள் தொடர்பிலும் அவர் தூதுவருக்கு விளக்கமளித்தார். தற்போதைய பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் நல்லிணக்கம் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் அரசாங்கம் முழுமையாக அர்ப்பணிப்புடன் இருப்பதாக அமைச்சர் தூதுவரிடம் உறுதியளித்தார்.

அமெரிக்கா இலங்கையின் நண்பன் என்றும் நாட்டில் உள்ள சவால்களை நன்கு புரிந்துகொள்வதாகவும் தூதுவர் சுங் தெரிவித்தார். இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என அவர் குறிப்பிட்டார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *