
கொழும்பு,மே 29
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை அனுப்பும் தீர்மானத்தை இந்திய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவைவில் முன்வைத்தபோது எதிர்க்கட்சிகளும் ஆதரவளித்தனர்.
அதற்கமைய அரிசி, உயிா் காக்கும் மருந்துகள், பால் மா உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கடந்த 18ஆம் திகதி சென்னையில் இருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தாா்.
இந்நிவாரண பொருட்கள் 22 ஆம் திகதி கொழும்பை வந்தடைந்தன. இந்த நிவாரணப் பொருள்கள் இலங்கையின் வடக்கு, கிழக்கு, மத்திய, மேற்கு மாகாணங்களில் உள்ள பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்படும் என இலங்கை அரசு தெரிவித்தது.
இந்த நிலையில் சனிக்கிழமை புகையிரதம் மூலம் நானுஓயாவை வந்தடைந்தது. இப் பொருட்களை உத்தியோகபூர்வமாக நுவரேலியா மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் நுவரேலியா மாவட்ட பிரதேச செயலாளருக்கும் வழங்கி தோட்டப்புறங்களிலே வாழ்கின்ற வேலை செய்கின்ற அதே போல் வேலை இல்லாதவர்கள் குறைந்த வருமானம் பெறுபவர்கள் சமுர்த்தி பெருநர்கள் போன்ற அனைவருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதில் ஒவ்வொரு கட்டமாக விநியோகம் செய்யப்படும். சனிக்கிழமை 21000 கிலோ அரிசி இங்கே வந்துள்ளது. அதே போல் மொத்தமாக 175000 கிலோ வர இருக்கிறது. இவற்றில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 kg வீதம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக நிரந்தர வருமானம் பெறுபவர்கள் மற்றும் அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்கு இது கிடைக்கின்ற வாய்ப்பு குறைவு , வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற அனைவருக்கும் குறிப்பாக தோட்ட தொழிலாளர்களுக்கும் தோட்டங்களிலே வாழ்பவருக்கும் இது வழங்கி வைக்கப்படும் எனத் தெரிவித்தனர்.