
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ், ஊடகவியலாளர் ஐ. நடேசன், கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் ரவீந்திரநாத் மற்றும் ஊடகவியலாளர் பிரகீத் என்னெலியகொட காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று சர்வதேச அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.
இதேசமயம், இந்த வழக்குகளுடன் தொடர்புடையவர் என்று கூறப்படும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என்று அறியப்பட்ட சிவநேசதுரை சந்திரகாந்தனை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழுத்தங்கள் வழங்கப்படுகின்றன என்று விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், முக்கிஸ்தர்களின் படுகொலை வழக்குகள் குறித்த விசாரணைகளுக்கு தேவையான ஆதாரங்கள், சாட்சியங்களும் திரட்டப்பட்டு வருகின்றன. இணைய வழியாகவும் சாட்சிகளிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன என்றும் அறிய வருகின்றது.
அத்துடன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள் செய்தனர் என்று கூறப்படும் படுகொலைகள், ஆள் கடத்தல்கள், பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் தொடர்பிலும் விசாரிக்கப்பட வேண்டும் என்றும், இவை தொடர்பில் வலுவான ஆதாரங்களும் வழங்கப்பட்டுள்ளன என்றும் அறிய வருகின்றது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை குற்றச்சாட்டில் கைதான சந்திரகாந்தன் எம். பி. கடந்த 2015 ஒக்ரோபர் 11ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
சிறையில் இருந்தவாறே கடந்த பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து வழக்குகளிலிருந்து கடந்த ஆண்டு விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ், ஊடகவியலாளர் ஐ. நடேசன், கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் ரவீந்திரநாத் மற்றும் ஊடகவியலாளர் பிரகீத் என்னெலியகொட காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்குகளுடன் தொடர்புடையவர்கள் என்று கருதப்படும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள்மீது மீண்டும் விரைவில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.