யாழ். மாவட்டத்திலே தற்போது மேற்கொள்ளப்படுகின்ற தமிழகத்தினால் வழங்கப்பட்ட அரசி மற்றும் பால்மா போன்ற அத்தியாவசிய பொருட்கள் விநியோகமானது ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் அரசாங்கத்தின் சுற்று நிரூபத்திற்கமைய அந்தந்த பிரதேச செயலகத்தின் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றன என யாழ். மாவட்ட அரச அதிபர் மகேசன் தெரிவித்தார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
யாழ் மாவட்டத்திற்கென 1 மில்லியன் அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தலா 10 கிலோ கிராம் வீதம் யாழ் மாவட்டத்தில் உள்ள 1 இலட்சம் மக்களுக்கு அதனை வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். மேலும் பால்மாவின் தொகையானது 7,500 குடும்பங்களுக்கு மாத்திரமே வழங்கக்கூடியதாக உள்ளது.
மிகவும் வறிய குடும்பங்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள், அங்கவீனம் உடைய குடும்பங்கள் மற்றும் அதிக பிள்ளைகளை கொண்ட குடும்பங்களுக்கு வழங்குவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்.
இந் நிலையில் யாழ் மாவட்டத்தில் 50% ஆனோருக்கு இந்த உதவி கிடைக்கப்பெற்ற உள்ளது. முதற்கட்ட தொகுதியினை வழங்கி இருக்கிறோம், குறிப்பாக தீவுப்பகுதியில், மருதங்கேணி போன்ற பிரதேச செயலகங்களில் 100% சதவீதம் வழங்கப்பட்டு வருகின்றன.
இதனை சரியான பயனாளிகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளன, இதற்கமைய பிரதேச செயலகங்கள் பின்பற்றுவார்கள். சமூர்த்தி பயனாளிகள், தொழில்களை இழந்தவர்களும் இந்த வறிய குடும்பங்களுக்கு வழங்கப்படும் இந்த உதவித்திட்டத்தில் உள்ளடக்கப்படுவார்கள். இதற்கு பிரதேச செயலகங்கள் சுயாதீன குழுக்களை அமைத்து வழங்கப்படும்.
எனவே, இதில் ஏதேனும் முறைகேடுகள் நடந்தால் அதனை பிரதேச உத்தியோகத்தர்களுக்கு தெரிவித்தால் அதற்குரிய நடவடிக்கைளை எடுப்பார்கள், இதுவரைக்கும் எந்த விதமான முறைகேடுகளும் இன்றி இந்த விநியோகம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. என்றார்.
பிற செய்திகள்