இரத்தினபுரி மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை

கொழும்பு,மே 31

தென்மேற்கு பிராந்தியத்தில் மழையுடனான வானிலை அதிகரித்துள்ளதன் காரணமாக பல இடங்களில் 100 மில்லிமீற்றருக்கு அதிக மழைவீழ்ச்சி பதிவாகி வருகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களின் சில இடங்களிலும் இடைக்கிடையே பலத்த மழை பெய்யக்கூடுமென எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள சிவப்பு அறிவித்தலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என்பதுடன், 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று 08.30 க்கு முடிவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் காலி, களுத்துறை, கம்பஹா, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இதன்படி, காலி மா வட்டத்தின் யக்கலமுல்ல பகுதியில் 192 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதேவேளை, பலத்த மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல்தாக்கம், மரங்கள் முறிந்து விழுதல் உள்ளிட்ட அனர்த்தங்கள் குறித்து அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்க்பட்டுள்ளது.
மேலும், மலைப்பாங்கான பிரதேசங்களில் வீதிகளில் பயணிப்போர் மற்றும் வா கன சாரதிகளை அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தறை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.
இந்த நிலையில், இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான, இரத்தினபுரி, எலபாத்த, குறுவிட்ட மற்றும் எஹெலியகொடை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு சிவப்புநிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க்பட்டுள்ளது.

மேலும், இரத்தினபுரி மாவட்டத்தின் கிரியுள்ள, பெல்மடுல்ல, அயகம மற்றும் நிவித்திகல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும்  கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, புளத்சிங்கள, வலக்காபொல, கேகாலை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும், செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.

அத்துடன், மாத்தறை மாவட்டத்தின் பஸ்கொட, அத்துரெலிய ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் கொடக்கவெல, கஹவத்த, ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கபட்டுள்ள பிரதேசங்களில் வாழும் மக்களை மிகுந்த அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்க்பட்டுள்ளது. மேலும், மண்மேடு சரிதல், கற்பாறைகள் சரிதல், நிலம் தாழ் இறங்குதல், மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மின்கம்பங்கள் சரிந்து வீழ்தல் உள்ளிட்ட அனர்த்தங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தல் விடுக்கபட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *