ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிகாரத்தில் இருக்கும்போதே 21 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்பித்து நிறைவேற்ற வேண்டும் என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
சில நேரம் அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படும் முன்னர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலக நேரிட்டால், பசில் ராஜபக்ச ஜனாதிபதியாக பதவிக்கு வரும் ஆபத்து காணப்படுகிறது.
அப்படி நடந்தால், அது மிகவும் பயங்கரமான நிலைமையாக இருக்கும். பசில் ராஜபக்ச என்பவர் தீவிர வலதுசாரி. இதனால், அரசியல் ரீதியான நடுநிலையாளராக இருக்கும் கோட்டாபய ராஜபக்சவை தக்கவைத்துக்கொள்வது சாதகமானது.
21வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள இரண்டு பிரதான விடயங்களில் ஒன்று இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவதை தடுப்பது.
இதனால், திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், பசில் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் இருந்து விலக நேரிடும்.

சட்டம் நிறைவேற்றப்பட்டு, பசில் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் இருந்து விலகிய பின்னர், பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களின் விருப்பத்திற்கு அமைய தகுதியான நபரை ஜனாதிபதியாக தெரிவு செய்ய முடியும்.
பசில் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் இருக்கும் வரை ஏதாவது ஒரு சதித்திட்டம் நடக்கலாம். அவர் நம்பிக்கை கொள்ள முடியாத அரசியல் சூழ்ச்சியாளர் எனவும் நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்