சிட்டை மூலம் எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கும் முறை வெற்றியளித்துள்ளது!

கொட்டகலை – அட்டன் நகரங்களில் சிட்டைகளின் மூலம் சமையல் எரிவாயுவை பயனாளிகளுக்கு விநியோகிக்கும் முறை வெற்றியளித்துள்ளதாக பயனாளிகள் தெரிவித்துள்ளனர்.

கொட்டலை வர்த்தக சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட குடும்பத்துக்கு ஒரு எரிவாயு சிலிண்டர் என்ற முறையினால், முகவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட சிலிண்டர்களின் அளவுக்கு சிட்டைகளைப் பெற்றவர்கள் மாத்திரம் இன்று (01) சிலிண்டர்களைப் பெற்றுக்கொண்டனர்.

இதனால் நீண்ட வரிசைகள் தவிர்க்கப்பட்டிருந்ததோடு இலக்கங்களின் படி சிட்டை கொண்டிருந்தோர் மாத்திரம் அவற்றைப் பெற்றனர்.

இதேவேளை அட்டன் டிக்கோய நகரசபை எல்லைக்குள் வசிக்கும் குடும்பங்களுக்கு அம்பகமுவ பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்த சிட்டை வழங்கும் முறையில், இலக்கங்களின் படி தொலைபேசி அழைப்பு மூலம் தகவல் பெற்றவர்கள் மாத்திரம் சிலிண்டர்களைப் பெற்று சென்றனர்.

நகரங்களில் உள்ள குறித்த முகவர்களுக்கு எத்தனை சிலிண்டர்கள் விநியோகிக்கப்படுகின்றன என்ற விபரத்தை பிரதேச செயலகம் பெறுகின்றது.

பின்னர் தாம் விநியோகித்த சிட்டைகளில் உள்ள இலக்கங்களின் அடிப்படையில் பயனாளிகளுக்கு அழைப்பெடுத்து அவர்கள் தெரிவு செய்த முகவரிடம் சென்று சிலிண்டர்களைப் பெறுமாறு கூறுகின்றனர்.

இதன் மூலம் இன்றைய தினம் அட்டன் நகரில் சுமார் 500 பேர் வரை எவ்வித ஏமாற்றங்களும் இல்லாது சிலிண்டர்களைப் பெற்று சென்றிருக்கின்றனர்.

உணவகங்களை நடத்துபவர்களுக்கு தேவைக்கு ஏற்றவாறு 5–10 சிலிண்டர்கள் வரை விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஒரு தரப்பினரே அதிக சிலிண்டர்களை கொள்வனவு செய்யும் சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் வீதி ஓரங்களில் சிலிண்டர்களை சங்கிலிகளால் பிணைத்து வைத்தல் மற்றும் வெளியார் அத்துமீறி சிலிண்டர்களைப் பெறல் போன்றவை நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த சிட்டை வழங்கும் முறையை ஏனைய பகுதிகளிலும் விஸ்தரிக்குமாறு மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அட்டன் –டிக்கோயா பிரதேசங்களில் உள்ள ஆயிரக்கணக்கானோர் இரண்டு நாட்களாக அட்டன் டன்பார் மைதானத்தில் தமது விபரங்களை பதிவு செய்திருந்ததுடன் இன்று நோர்வூட் தியசிறிகமவில் உள்ள அம்பகமுவ பிரதேச செயலகத்தின் உப காரியாலயத்திலும் நெருக்கடிகள் இல்லாது சென்று தமக்குரிய சிட்டைகளை பதிவு செய்து இலக்கங்களைப் பெற்றனர் என்பது முக்கிய விடயம்.

பிற செய்திகள்

ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆப்கானிய அகதிகள் தாய்நாட்டுக்கு திரும்பினர்

திருச்சி சிறப்பு முகாமில் வாடும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்யுங்கள்! அன்புமணி வலியுறுத்து

அட்டாளைச்சேனை சிறுமி துஷ்பிரயோகம்; சிறுவர்களுக்கு விளக்கமறியல்!

வெளிநாட்டவர்களுக்கு இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் நீண்டகால விசா!

அவுஸ்திரேலியாவின் புதிய அரசாங்கம் அங்குள்ள தமிழ் அகதிகளை விடுவிக்குமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *