
கொழும்பு,ஜுன் 01
சரக்கு சேவைகளுக்காக கப்பல் நிறுவனங்களுக்கு இதுவரை 252 பில்லியனுக்கும் அதிகளவான தொகை செலுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பணம் செலுத்தப்படாத நிலையில், எதிர்காலத்தில் இலங்கைக்கு பொருட்களை கொண்டுவரும் நடவடிக்கைகள் முற்றாக தடைப்படலாமென குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கப்பல் முகவர்கள் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.
இந்த நிலையில், மத்திய வங்கி அதிகாரிகளுடன் கலந்துரையாடி தீர்வொன்றை முன்வைப்பதற்கு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இணக்கம் தெரிவித்துள்ளதாக கப்பல் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொழும்பு துறைமுகத்தில் கடந்த 10 வருடங்களாக சுமார் 800 கொள்கலன்களில் பல்வேறு பொருட்கள் தேங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுங்கப் பரிசோதனைகள் நிறைவடையாததன் காரணமாக இவ்வாறு பொருட்கள் தேங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, துறைமுகத்தின் பெரும்பகுதியினை பயன்படுத்த முடியாத நிலையில், குறித்த கொள்கலன்களை உடனடியாக அகற்றுமாறு துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.