காணாமல்போன மிருசுவில் குழந்தை மீட்கப்பட்டது!

யாழ். தென்மராட்சி மிருசுவில் பகுதியிலிருந்து காணாமல் போயிருந்த மூன்று வயதுச் சிறுமி ஆறு கிலோமீற்றர் தொலைவில் மாசேரிப் பகுதி மக்களால் மீட்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

மிருசுவில் வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் முற்றத்தில் சகோதரனுடன் விளையாடிக் கொண்டிருந்த கபிலன் பவிதா (3 வயது) என்ற சிறுமி காணாமல் போயிருந்தமை தென்மராட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பலநூற்றுக்கணக்கான மக்களும் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து பல பகுதிகளிலும் தேடுதல் நடவடிக்கையில் இரவிரவாக ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் மிருசுவிலிருந்து ஆறு கிலோமீற்றர் தொலைவில் உள்ள மாசேரி என்ற பகுதியில் சிறிய ஆலயம் ஒன்றிற்கு அருகியில் தரித்து நின்றிருந்த சிறுமி அங்கிருந்த மக்களால் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு, பொலிஸார் அங்கு சென்று குழந்தையை மீட்டு கொடிகாமம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வந்திருக்கின்றனர்.

சிறுமி அச்சத்தால் உறைந்து காணப்படுவதாகவும் யாருடனும் பேசாது காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சிறுமி ஆறு கிலோமீற்றர் தூரம் வெறுங்காலுடன் நடந்திருப்பரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த நிலையில் சிறுமி பயணித்தமைக்கான காலடித்தடம் காணப்படுவதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

சிறுமி கடந்து சென்ற பகுதியில் ஒரு பகுதி நீரேந்து பிரதேசமான களப்புப் பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *