21ஆவது திருத்தச்சட்டமூல வரைவு குறித்து 10 அரசியல் கட்சிகள் யோசனைகள் முன்வைப்பு

ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் பிற நாடுகளுடன் செய்துக்கொள்ளும் இருதரப்பு மற்றும் பல்தரப்பு ஒப்பந்தங்கள் நாடாளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட வேண்டும். நாடாளுமன்றத்தின் கண்காணிப்பின் முழு அரச நிர்வாகமும் முன்னெக்கப்படல், ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சினை தவிர்த்து ஏனைய எந்த அமைச்சுக்களையும் வகிக்ககூடாது என நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 10 அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்டமூல வரைவு தொடர்பில் தமது யோசனைகளை நீதி, சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஷ ராஜபக்ஷவிடம் முன்வைத்துள்ளனர்.

அந்த யோசனைகள் வருமாறு,

குறித்த சட்டமூலத்துக்கு நாடாளுமன்ற தெரிவு குழுவின்போது சில திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அதற்கு சபாநாயகர் கைச்சாத்திட்டதை தொடர்ந்து அச்சட்டத்தை உயர்நீதிமன்றில் சவாலுக்குட்படுத்த நாட்டு பிரஜைகளுக்கு ஒரு மாதகாலம் அவகாசம் வழங்க வேண்டும். ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் பிற நாடுகளுடன் செய்துக்கொள்ளும் இருதரப்பு மற்றும் பல்தரப்பு ஒப்பந்தங்கள் நாடாளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

அரச நிறுவனத்தின் கட்டமைப்பை மாற்றம் செய்யும்போது அதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதி பெறப்பட வேண்டும், துறைமுகம், விமான நிலையம் ஆகிய தேசிய வளங்களின் முதலீடுகள் மற்றும் ஒப்பந்தங்கள் தேசிய பெறுகை ஆணைக்குழுவின் கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்கப்பட்டு அதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.தேசிய பாதுகாப்பு சபையின் உறுப்பினராக பிரதமர் பதவி வகிக்க வேண்டும்,ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சினை மாத்திரம் வகிக்க வேண்டும்,

பிரதமர் உட்பட எதிர்க்கட்சி தலைவர் அரசியலமைப்பு சபைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை தவிர்த்து ஏனையோரை தெரிவு செய்யும் போது இலங்கை வர்த்தக சபையினால் பெயர் குறிப்பிடப்படும் வர்த்தகர் அல்லது நிறுவன பணிப்பாளர்,தொழிற்சங்கத்தினால் பெயர் குறிப்பிடப்படும் நிபுணர், பல்கலைக்கழக வேந்தர்கள் ஒன்றியத்தின் பரிந்துரைக்கமைய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பெயர் குறிப்பிடப்படும் ஒருவர் என்ற அடிப்படையில் அந்த மூன்று பேர் தெரிவு செய்யப்பட வேண்டும்.

ஒரு நபரை ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிப்பதற்கு அரசியலமைப்பு சபை ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யும் போது அந்த பரிந்துரை எத்தன்மையில் அமைய வேண்டும் என்பது தொடர்பில் குறிப்பிடப்படவில்லை.ஆணைக்குழுவின் உறுப்பினர் நியமனத்துக்கு பெயர் குறிப்பிடும் வாய்ப்பு சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

அரசியலமைப்பு சபையினால் ஒரு பதவிக்கு பரிந்துரை செய்யப்படும் நபர் தகைமை பெற்றவராக காணப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.இருப்பினும் அதற்கான முறையான கட்டமைப்பு குறிப்பிடப்படவில்லை. மேல் நீதிமன்றத்துக்கு நீதிபதிகளுக்கான பரிந்துரைகளின்போது சிறந்த தரப்பினரது பெயர் உள்ளடங்கப்படுதில்லை என்ற குற்றச்சாட்டு சமூகத்தில் மத்தியில் காணப்படுகிறது. இவ்வாறான விடயம் குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும்.

அத்துடன் 44(1),44(2),45(1),45(2),மற்றும் 46(1) ,50(1) ஆகிய திருத்த யோசனைகளில் பிரதமரின் ஆலோசனைக்கமைய என்பதற்கு பதிலாக பிரதமரின் எழுத்து மூலமாக இணக்கப்பாடு என திருத்தம் செய்யப்பட வேண்டும்.

பொலிஸாரினால் பொது மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி மற்றும் நெருக்கடி தொடர்பில் உயர் அதிகாரிகளுக்கு முறைப்பாடளிக்கப்பட்டாலும் அது குறித்து அவர்கள் விசாரணைகளை முன்னெடுக்க முயற்சிப்பதில்லை. ஆகவே பொது மக்களின் முறைப்பாடு மற்றும் உயர் அதிகாரிகளின் அலட்சியப்போக்கு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் அதிகாரம் பொலிஸ் ஆணைக்குழுவுக்கு வழங்க வேண்டும். நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதியின் பதவி காலத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் திருத்தங்களை மேற்கொள்ளக்கூடாது.அது தொடர்பில் இடைக்கால விடயதானங்களை உள்ளடக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *