தனது முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட் மீது பிரபல நடிகர் ஜொனி டீப் தொடர்ந்த அவதூறு வழக்கில் ஜொனி டெப்புக்கு ஆதர வாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
‘பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்’ படம் மூலம் பிரபலமான ஹொலிவுட் நடிகர் ஜொனி டீப்.
தன்னைவிட 25 வயது குறைவான அமெரிக்க நடிகை ஆம்பர் ஹெர்ட் மீது காதல் வயப்பட்டு 2015-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ஆனால், இவர்களின் திருமண வாழ்க்கை வெகுநாள்கள் நீடிக்கவில்லை.
2016 ஆம் ஆண்டு ஆம்பர் ஹெர்ட் , ஜொனி டீப் உடன் இணைந்து வாழ முடியாத காரணத்தால் இருவரும் பரஸ்பர விவாகரத்துப் பெற்றனர்.
அதேவேளை தனது முன்னாள் கணவரான ஜொனி டீப் தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாகவும், குடும்ப வன் முறைக்கு உள்ளானதாகவும் வழக்குத் தொடர்ந்த ஆம்பர் தனக்கு நஷ்டஈடாக 776 கோடி ரூபாய் இழப்பீடு வழக்கக்கோரி வழக்குத் தொடர்ந்தார்.
இந்தக் குற்றச்சாட்டை மறுத்த ஜானி டீப் தனது முன்னாள் மனைவி ஆம்பர் மீது மானநஷ்டஈடு வழக்குத் தொடர்ந்தார்.
தனது பெயர், புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் ஆம்பர் செயற்படுவதாக இதற்கு இழப்பீடாக 380 கோடி ரூபா நஷ்ட ஈடு வழங்கக் கோரியும் ஆம்பர் மீது ஜானி டீப் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கின் இறுதிக் கட்ட விசாரணை கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்தது. பல்வேறு சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன. இந்த இறுதிகட்ட விசாரணை உலக அளவில் பேசுபொருளானது.
இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது.
அதன்படி, ஜொனி டீப்புக்கு எதிராக அவதூறு பரப்பும் நோக்கத்துடன் ஆம்பர் செயற்பட்டது உறுதியாகியுள்ளது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அத்தோடு ஜொனி மீது ஆம்பர் தெரிவித்த பாலியல் குற்றச்சாட்டுகளும் போலியானவை என நீதிமன்றம் தெரிவித்தது.
இதனடிப்படையில் அவதூறு பரப்பும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்தற்காக ஆம்பர் தனது முன்னாள் கணவர் ஜொனிக்கு இழப்பீடாக 78 கோடி ரூபாவும் அபராதமாக 38 கோடி ரூபாவுமாக மொத்தம் 116 கோடி ரூபா வழங்க வேண்டும் என நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இது ஜொனிக்குக் கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது. ஜொனிக்கு ஆதரவாக தீர்ப்புகள் வெளியான நிலையில் அவரது ரசிகர்கள் சமூகவலைதளங்களில் உற்சாகக் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.