டீசல் இன்மையால் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகளும் வியாபாரிகளும் கவலை தெரிவித்துள்ளனர்.
நுரைச்சோலை பொருளாதார மத்திய நிலையத்திற்கு வெளி மாவட்ட வியாபாரிகளின் வருகை குறைந்தளவில் காணப்படுவதினால் தமது மரக்கறிகளை குறைந்தளவிலேயே கொள்வனவு செய்யப்படுவதாகவும், இதனால் விவசாயிகளும் வியாபாரிகளும் பாரிய நஷ்டங்களை எதிர் நோக்கி வருவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாகவும் டீசல் இல்லாமை உள்ளிட்ட பல காரணங்களினால் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தாம் விவசாயிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
இந்நிலையில், மரக்கறிகளை தினந்தோறும் நுரைச்சோலை பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள வியாபாரிகளுக்கு வழங்கி வந்த நிலையில் அந்த மரக்கறிகளை கொள்வனவு செய்வதற்காக வெளி மாவட்ட வியாபாரிகளின் வருகை குறைந்தளவில் காணப்படுவதால் தமது உற்பத்திப் பொருட்களான மரக்கறிகள் மீதமாகும் நிலை காணப்படுவதாகவும் விவசாயிகளும் வியாபாரிகளும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதனால் தாங்கள் கடும் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்து வருவதாகவும் விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
எனவே வெளி மாவட்ட வியாபாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் தங்கு தடையின்றி எரிபொருட்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேலும் அவர்கள் கோரிக்கை விடுகின்றனர்.


பிற செய்திகள்