கட்டுநாயக்க வந்தடைந்த ரஷ்ய பயணிகள் விமானம் மீண்டும் மொஸ்கோ செல்ல நீதிமன்றால் தடை விதிப்பு

கொழும்பு,ஜுன் 02

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வந்து மீண்டும் ரஷ்யாவுக்கு  புறப்படவிருந்த விமானம் ஒன்றின் பயணத்தை இடைநிறுத்தி கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையடுத்து கட்டுநாயக்கவில் அது தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய Aeroflot Airlinesக்கு உரித்தான  SU-288 என்ற இந்த விமானம் வியாழக்கிழமை (02) காலை 10.10 மணியளவில் ரஷ்யாவின் மொஸ்கோவிலிருந்து புறப்பட்டு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

குறித்த விமானம்  இன்று பகல்12.50 மணிக்கு மீண்டும் மொஸ்கோவுக்கு புறப்படவிருந்தது.
இந்த விமானத்தில் பயணிப்பதற்காக 200க்கும் மேற்பட்ட பயணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமான  நிலையத்துக்கு வந்திருந்தனர்.

இந்நிலையில், கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு, குடியகல்வு பிரிவு அதிகாரிகளுக்கு நீதிமன்றின் உத்தரவு கிடைக்கப்பெற்றது.  இதன்படி குறித்த விமானம் பயணிப்பதை தடுக்குமாறு கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதன்படி, விமானப் பயணம் இரத்துச் செய்யப்பட்டதுடன், விமானத்தில் செல்வதற்காக வந்திருந்த  பயணிகள் கட்டுநாயக்க விமான நிலைய சுற்று வட்டார சுற்றுலா விடுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *