
மன்னார் – பேசாலையில் இருந்து கடல் தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் மீது கடற்படையினர் தாக்குதல் நடத்தியதில் 7 மீனவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேசாலையில் இருந்து நேற்று மாலை 3 மணியளவில் கடலிற்கு புறப்படத் தயரான படகுகளை கடற்படையினர் தீவிர சோதனைக்கு உட்படுத்தியபோது, கடற்படையினருக்கும் மீனவர்களிற்கும் இடையே கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது கடற்படையினர் மீனவர் ஒருவர் மீது கடும் தாக்குதல் மேற்கொண்டதனால், பாதிப்படைந்த மீனவர் பேசாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதன்பின்பு மீனவர்கள் கடற்படையினரிடம் மன்னிப்புக்கோரி, சமரசத்தின் அடிப்படையில் தொழிலிற்குச் சென்றனர்.
இவ்வாறு தொழிலிற்குச் சென்ற மீனவர்கள் மாலை 5.30 மணியளவில் தலை மன்னார் கடற்பரப்பில் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயம், அவ்விடத்திற்கு படகில் வந்த கடற்படையினர் மீனவர்களை மீண்டும் சோதனைக்குட்படுத்தியதோடு, படகுகளுடன் தீடைக்கு கொண்டு செல்ல முற்பட்டுள்ளனர்.
வேண்டுமானால் எம்மை கடற்படை முகாமிற்கு கொண்டு செல்லுங்கள், எதற்கு யாருமே அற்ற தீடைக்கு கொண்டு செல்கின்றீர்கள் என மீனவர்கள் கேள்வி எழுப்பியபோதும், அதனை செவிசாய்க்க மறுத்த கடற்படையினர், மீனவர்களை தீடைக்கு கொண்டு சென்றனர்.
தீடையில் இறக்கிய மீனவர்களை, மீண்டும் சோதனை செய்ததோடு, உடல் பரிசோதனைகளையும் மேற்கொண்ட சமயம், முன்னர் பேசாலையில் முரண்பாடு ஏற்பட்டபோது பிடிக்கப்பட்ட வீடியோப் படத்தின் மூலம் மீனவர்களை இனம்கண்டு ஆறு மீனவர்கள் மீது தாக்குதல் நடாத்தியதாக, பாதிக்கப்பட்ட மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் தீடையில் தாக்கப்பட்ட 6 மீனவர்களும், ஏனைய மீனவர்களின் உதவியுடன் பேசாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக மீனவர் சங்கங்கள், பங்குத் தந்தை ஆகியோர் கடற்படையினரின் கவனத்திற்கு கொண்டு சென்றபோதும் தீர்வு கிட்டவில்லை.
பிற செய்திகள்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்