கனடாவில் சாதித்த இலங்கைத் தமிழர்கள்!

கனடா – ஒன்ராறியோ மாகாணத் தேர்தலில் இலங்கைத் தமிழர்கள் இருவர் வெற்றியை பதிவு செய்துள்ளனர்.

இலங்கை தமிழ் – கனேடியர்களான விஜய் தணிகாசலம் மற்றும் லோகன் கணபதி ஆகியோரே தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் சட்டமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இத் தேர்தலில் போட்டியிட்ட கனேடிய – தமிழர்களான செந்தில் மகாலிங்கம், சாந்தா சுந்தரசன், அனிதா ஆனந்தராஜா ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர்.

விஜய் தணிகாசலம் ஒன்ராறியோவின் முற்போக்கு கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் ரொரண்டோ ஸ்காபரோ – ரூஜ் பார்க் தொகுதியில் போட்டியிட்டார். 2018 ஆம் ஆண்டு முதல் இந்தத் தொகுதியை விஜய் தணிகாசலம் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

தற்போதைய நிலவரப்படி எண்ணப்பட்ட 34,602 வாக்குகளில் 15,732 (45.03%) வாக்குகளைப் பெற்று விஜய் தணிகாசலம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மணல் அப்துல்லாஹி (லிபரல்) 27.05 வீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தையும், பெலிசியா சாமுவேல் (என்.டி.பி) 21.9% சதவீத வாக்குகளுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.

மார்க்கம் – தோர்ன்ஹில் தொகுதியில் முற்போக்கு கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட லோகன் கணபதி 14,011 (48.8%) வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

லிபரல் வேட்பாளர் சாண்ட்ரா டாம் 10,763 (37.5%) வாக்குகளையும், என்.டி.பி. வேட்பாளர் மத்யூ ஹென்ரிக்ஸ் 2,597 (9%) வாக்குகளையும் பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *