
தமிழீழ தேசிய விடுதலைக்காக போராடிய மாவீரர்களின் தியாகங்களே தமிழீழ விடுதலை போராட்டம் எழுச்சி பெறக்காரணம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
உரும்பிராய் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற தியாகி பொன் சிவகுமாரனின் 48 ஆவது நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதல் வித்தாக இருந்தவர்.முதலாவது தற்கொடையாக தனது உயிர் கொடுத்தவர் தியாகி சிவகுமார்.கடந்த காலத்தில் சிவகுமார் கைது செய்யப்படலாம் என மறைந்திருந்த சூழ்நிலையில் , அர்ப்பணிப்புடன் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர். தமிழீழ தேசிய விடுதலைக்காக போராடிய மாவீரர்களின் தியாகங்களே தமிழீழ விடுதலை போராட்டம் எழுச்சி பெற்றமைக்கு முக்கிய காரணமாகும் என்றார்.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் நிரோஷ் கருத்து தெரிவிக்கையில்:
தமிழ் மக்களின் தேசியம்,அடையாளம் நிறைவேற்றப்பட வேண்டும் என தன்னிகரில்லா பெரும் பணி ஆற்றியவர் பொன் சிவகுமார் . தியாக வீரனாக இருக்கக்கூடிய சிவகுமாரின் விடுதலை போராட்டத்தின் வரலாற்றிலே இன்றும் வழித்தொடரப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது.
இவரின் கருத்துக்களையும் ,சிந்தனைகளையும் உள்வாங்கி செயற்பட வேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம். அரச ஆக்கிரமிப்புக்கள், அரசின் அடக்குமுறைகள் தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கப்பட்ட தருணத்தில் நியாயமான உரிமைகளுக்காக நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்ததுடன் தனது இலட்சியத்தை நிலைநாட்டுவதற்காக செயற்பட்டிருக்கிறார் என்றார்.