போதைப்பொருள் விவகாரத்தினால் தங்காலை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
தங்காலை – மொரகட்டியார பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் 2 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கெப் ரக வாகனம் ஒன்றினை இலக்கு வைத்து உந்துருளியில் பிரவேசித்தவர்களால் இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவத்தில் கெப் ரக வாகனத்தை செலுத்திய தங்காலை – குடாவெல்ல பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவரே உயிரிழந்தார்.
உயிரிழந்தவர், போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர் என குறிப்பிடப்படுகின்றது.
போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு இடையிலான தனிப்பட்ட முரண்பாடு காரணமாக இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் மற்றும் நேற்று முன்தினம் அஹங்கம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கும் இடையில் ஏதேனும் தொடர்புள்ளதா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அஹங்கம பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த நபரும் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுக்கப்பட்டவராவார் என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில், தங்காலை பொலிஸ் துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதுதவிர, கடந்த 3ஆம் திகதி பாணந்துறை மற்றும் அளுத்கம பகுதிகளிலும் துப்பாக்கி பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றிருந்ததுடன், அவற்றில் 2 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்