யாழிலுள்ள பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருள் இல்லை

யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருள் இல்லை எனக்கூறி மூடப்பட்டுள்ளமையினை அவதானிக்க முடிந்ததுடன் ஒருசில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசை காணப்பட்டது.

அதேவேளை சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொதுமக்களுக்கும் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது.

இன்று(7) இரவு 7 மணியளவில் யாழ்ப்பாணம் மணிக்கூட்டுக் கோபுர வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமக்கள் எரிபொருள் இல்லை என்பதை உறுதிப்படுத்த கேட்டதையடுத்து எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று வாரங்களுக்கு எரிபொருள் நெருக்கடி நிலை ஏற்படலாம் என தெரிவித்ததனைத் தொடர்ந்து எரிபொருள் விலை அதிகரிப்பு ஏற்படலாம் என்ற போலியான தகவல்கள் பரவின.

இந்த நிலையில் பொதுமக்களும் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மதியம் முதல் எரிபொருள் நிரப்புவதற்கு முண்டியடித்த நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டு காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது.

எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் இதுவரை எந்தவிதமான உத்தியோகபூர்வமான தகவல்களும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *